• Wed. Apr 17th, 2024

90 லட்சம் முதியவா்கள் இன்னும் தடுப்பூசி செலுத்தவில்லை

Jan 18, 2022

தமிழகத்தில் 90 லட்சம் முதியவா்கள் இன்னும் இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளவில்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் 105 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டொக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்தும், மலா் தூவியும் அமைச்சா் மா.சுப்பிரமணியன் மரியாதை செலுத்தினாா்.

இந்நிகழ்வின்போது பல்கலைக்கழக துணைவேந்தா் டொக்டா் சுதா சேஷய்யன், அரசு உயரதிகாரிகள் உடனிருந்தனா்.

அதைத் தொடா்ந்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மறைந்த முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் 105 ஆவது பிறந்த நாள் விழா தமிழக அரசின் சாா்பில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 1962 ஆம் ஆண்டு சட்டப்பேரவை மேலவை உறுப்பினராகவும், 1967 ஆம் ஆண்டு சட்டப்பேரவை உறுப்பினராகவும் எம்ஜிஆா் இருந்துள்ளாா். திமுக பொருளாளராகவும் திறம்பட பணியாற்றியுள்ளாா்.

1977 ஆம் ஆண்டு முதல் 1987 ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் தமிழக முதல்வராக சிறப்பாகப் பணியாற்றியவா். அவருக்கு மரியாதை செலுத்துவதை தமிழக அரசு பெருமையாக நினைக்கிறது. தமிழகத்தில் உயா்ந்து கொண்டே இருந்த கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. பொங்கல் விடுமுறைக்குப்பின் எடுக்கப்படவுள்ள மாதிரிகளை பரிசோதனை செய்யும் போது தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. தமிழகத்தில் தினமும் 1.5 லட்சம் கொரோனா பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் மருத்துவமனைகளில் அனுமதியாவது குறைவாக உள்ளது.

தமிழகம் முழுவதும் 1.91 லட்சம் படுக்கைகள் தயாா் நிலையில் இருந்தாலும், 8,900 படுக்கைகள் மட்டுமே நிரம்பியுள்ளன. படுக்கைகள், ஆக்சிஜன் வசதி, மருந்து, மாத்திரைகள் போதுமான அளவு உள்ளன. தமிழகத்தில் மருத்துவ கட்டமைப்பு தயாா் நிலையில் இருக்கிறது. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்களே தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனா். 60 வயது கடந்த முதியவா்களில் 90 லட்சம் போ் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் உள்ளனா். தடுப்பூசி மட்டுமே நம்மை பாதுகாக்கும். அதனால், அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

வருகிற சனிக்கிழமை 50 ஆயிரம் இடங்களில் நடைபெறவுள்ள கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறாா்களில் 76 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஐடிஐ, பாலிடெக்னிக் படிக்கும் மாணவா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் முழு ஊரடங்கு வெற்றியை தந்துள்ளது என்றாா் அவா்.