• Fri. Mar 29th, 2024

இலங்கையில் வெளியாகியது புதிய சுகாதார வழிகாட்டல்கள்

Nov 16, 2021

இலங்கையில் கொரோனா பரவல் அபாயம் எழுந்துள்ள நிலையில் கட்டுப்பாடுகளை மேலும் இறுக்கமாக்கும் புதிய சுகாதார வழிகாட்டல் வெளியாகியுள்ளது.

இன்று(16) முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை பின்பற்ற வேண்டிய புதிய சுகாதார நடைமுறைகள் வழிகாட்டியை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

இக்காலப்பகுதியில் சமய நிகழ்வுகள், பொது நிகழ்வுகள், திருமண நிகழ்வுகள் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதுடன் வரையறுக்கப்பட்ட தொகையினரே பங்குபற்ற முடியும் என்றும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன், வீடுகளில் வெளியார் 10 பேருக்கு மேல் ஒன்றுகூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. புதிய வழிகாட்டலில் தெரிவிக்கப்பட்டுள்ள விபரங்கள் வருமாறு,

  • வீடுகளை விட்டு தேவையில்லாமல் வெளியே செல்வதைத் தவிர்க்கவும். இதன் மூலம் குடும்பத்தில் உள்ள ஏனையவர்களுக்கும் தொற்று அபாயத்தைக் குறைக்க முடியும்.
  • மெய்நிகர் சந்திப்புகள் வலுவாக ஊக்குவிக்கப்படுகின்றன.
  • மண்டபம், நிகழ்விடத்தில் இடம்பெறும் நிகழ்வுகள், ஒன்றுகூடல்களில் நிகழ்விடத்தின் மொத்த கொள்ளவில் மூன்றில் ஒரு பங்கினரே பங்கேற்க முடியும்.
  • மொத்த பங்கேற்பாளர் தொகை 150 -க்கு மேற்படாமல் இருந்தல் வேண்டும். உள்ளரங்குகளில் நிகழ்விடத்தின் கொள்ளளவில் மூன்றில் ஒரு பங்கினர் 100 பேருக்கு மேற்படாத வகையில் பங்கேற்க அனுமதிக்கப்படுகிறது.
  • வெளிப்புற தனிப்பட்ட கூட்டங்களுக்கு அனுமதி இல்லை.
  • வர்த்தக மையங்கள் சுகாதார அதிகாரிகளின் கடுமையான மேற்பார்வையின் கீழ் மொத்த வியாபாரத்திற்காக திறக்க அனுமதிக்கப்படும்.
  • உணவு கையாளும் நிலையங்களில் அதன் கொள்ளளவு திறனுக்கு மூன்றில் ஒரு பங்கினர் பங்கேற்ற அனுமதிக்கப்படும். மொத்த நபர்களின் எண்ணிக்கை 75-க்கு மேற்படலாகாது.
  • பலசரக்குக் கடைகள், மருந்தகங்கள், பல்பொருள் அங்காடிகள் அதன் கொள்ளளவு திறனில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மூன்றில் ஒரு பங்குக்கு மேற்படாதவர்கள் அனுமதிக்கப்படலாம்.
  • வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்களில் ஒரே நேரத்தில் 15 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படலாம். மீதமுள்ள வாடிக்கையாளர்கள் மையங்களுக்கு வெளியே ஒரு மீற்றர் இடைவெளியைப் பேணக் கூடயவாறு வரிசையில் நிற்க வேண்டும்.
  • சலூன்கள், தையலகங்களில் முன்கூட்டிய பதிவுகள் மூலம் வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்பட வேண்டும்.
  • பாடசாலைகள் குறித்து கல்வி அமைச்சு தீர்மானிக்கும். பகல்நேர பராமரிப்பு நிலையங்கள், முன்பள்ளிகள் திறக்க அனுமதிக்கப்படுகின்றன.
  • பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்கள் குறித்து மானிய ஆணைக்குழு தீர்மானங்களை எடுக்கும்.
  • தொழிற்பயிற்சி நிறுவனங்கள் அதன் மொத்த கொள்ளளவு திறனில் 50% பேரை ஒரே நேரத்தில் அனுமதிக்கலாம்.
  • நீதிமன்றங்கள் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின் கீழ் செயற்பட வேண்டும்.
  • திரையரங்குகள் மற்றும் உடற்பயிற்சிக் கூடங்களில் அவற்றின் மொத்த கொள்ளளவு திறனில் 50 வீதமானவர்களை மட்டுமே ஒரே நேரத்தில் அனுமதிக்க முடியும்.
  • விளையாட்டு நிகழ்வுகளில் பார்வையாளர்கள் அனுமதி இல்லை.
  • திருமண நிகழ்வுகளின்போது மண்டபத்தின் வழக்கமான கொள்ளளவு திறனில் மூன்றில் ஒரு பங்கினர் பங்கேற்க முடியும். எனினும் 100 பேருக்கு மேற்பட்டவர்கள் கூட அனுமதி இல்லை. வெளிப்புற நிகழ்வுகளில் 150 பேர் வரை அனுமதிக்கப்படுவார்கள்.
  • இறுதிச் சடங்குகளில் ஒரே நேரத்தில் 20-க்கு மேற்படாதவர்கள் பங்கேற்க முடியும். அத்துடன், ஒருவர் இறந்து 24 மணி நேரத்திற்குள் இறுதிச் சடங்குகள் செய்யப்பட வேண்டும்.