• Fri. Mar 29th, 2024

வரலாற்றில் இன்று மார்ச் 12

Mar 12, 2022

மார்ச் 12 கிரிகோரியன் ஆண்டின் 71 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 72 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 294 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

1622 – இயேசு சபை நிறுவனர்கள் லொயோலா இஞ்ஞாசி, பிரான்சிஸ் சவேரியார் ஆகியோருக்கு கத்தோலிக்க திருச்சபை புனிதர்களாக அறிவித்தது.

1870 – இலங்கையில் இருந்து முதல் தடவையாக ஐரோப்பாவிற்கு கோப்பி ஏற்றுமதி சூயசு கால்வாய் வழியே மேற்கொள்ளப்பட்டது.

1879 – நூற்றுக்கும் அதிகமான ஆங்கிலப் படைகள் சூலுக்களினால் சுற்றிவளைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

1894 – முதற் தடவையாக கொக்கா-கோலா மென்பானம் கண்ணாடிப் புட்டியில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வந்தது.

1913 – ஆத்திரேலியாவின் வருங்கால தலைநகர் அதிகாரபூர்வமாக கான்பரா எனப் பெயரிடப்பட்டது. கான்பரா அமைக்கப்படும் வரையில் 1927 வரையில் மெல்பேர்ண் தற்காலிகத் தலைநகராக இருந்தது.

1918 – 215 ஆண்டுகளாக உருசியாவின் தலைநகராக இருந்த சென் பீட்டர்ஸ்பேர்க் தலைநகர் அந்தஸ்து மாற்றப்பட்டு மாஸ்கோ தலைநகராக்கப்பட்டது.

1922 – ஆர்மீனியா, சியார்சியா, அசர்பைஜான் ஆகிய நாடுகள் திரான்சுகாக்கேசிய சோசலிச சோவியத் குடியரசு என்ற பெயரில் இணைந்தன.

1928 – கலிபோர்னியாவில் சென் பிரான்சிசு அணைக்கட்டு உடைந்ததில் 431 பேர் உயிரிழந்தனர்.

1930 – மகாத்மா காந்தி பிரித்தானிய ஆட்சியாளரின் உப்பு ஆதிக்கத்துக்கு எதிராக 200 மைல் நீள தண்டி யாத்திரையை ஆரம்பித்தார்.

1934 – எசுத்தோனியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அரசியல் கட்சிகள் தடை செய்யப்பட்டன.

1938 – செருமானியப் படைகள் ஆஸ்திரியாவை ஆக்கிரமித்தன. அடுத்த நாள் இணைப்பு அறிவிக்கப்பட்டது.

1940 – பனிக்காலப் போர்: பின்லாந்து மாஸ்கோவுடன் அமைதி உடன்பாட்டிற்கு வந்தது. கரேலியாப் பகுதி முழுவதும் சோவியத் ஒன்றியம் பெற்றுக் கொண்டது. பின்லாந்துப் படைகளும் மீதமிருந்த மக்களும் உடனடியாக வெளியேறினர்.

1942 – இரண்டாம் உலகப் போர்: பசிபிக் போர்: சாவகத்தில் இடம்பெற்ற சமரில் அமெரிக்க-பிரித்தானிய-ஆத்திரேலிய கூட்டுப் படை பண்டுங் என்ற இடத்தில் சப்பானிடம் சரணடைந்தது.

1943 – கிரேக்கம் மீதான இத்தாலிய ஆக்கிரமிப்பு: இத்தாலியப் படைகள் கார்திசுத்தா நகரைக் கைவிட்டு வெளியேறின. இதே நாளில், இத்தாலியப் படைகள் சரித்சானி நகரை சூறையாடி, 360 வீடுகளை எரித்தனர், 40 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

1950 – வேல்சில் வானூர்தி ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 80 பேர் உயிரிழந்தனர்.

1954 – சாகித்ய அகாதெமி இந்திய அரசினால் தொடங்கப்பட்டது.

1967 – சுகார்த்தோ இந்தோனேசியாவின் அரசுத்தலைவரானார்.

1968 – மொரிசியசு பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது

1992 – மொரிசியசு பொதுநலவாய அமைப்பினுள் குடியரசானது.

1993 – அணுக்கரு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் இருந்து விலகவிருப்பதாக வட கொரியா அறிவித்தது.

1993 – மும்பையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 300 பேர் கொல்லப்பட்டனர்.

1999 – முன்னாள் வார்சா ஒப்பந்த நாடுகள் செக் குடியரசு, அங்கேரி, போலந்து ஆகியன நேட்டோவில் இணைந்தன.

2003 – செர்பியாவின் பிரதமர் சொரான் தின்திச் பெல்கிறேட் நகரில் கொல்லப்பட்டார்.

2003 – சார்சு தொற்றுநோய் குறித்த உலகளாவிய எச்சரிக்கையை உலக சுகாதார அமைப்பு அதிகாரபூர்வமாக விடுத்தது.

2006 – தென்னாபிரிக்கா ஒரு நாள் பன்னாட்டுத் துடுப்பாட்டமொன்றில் 438/9 ஓட்டங்களைப் பெற்று ஆஸ்திரேலியாவை (434) வென்று சாதனை படைத்தது.

2007 – கலிபோர்னியாவில் ஏற்பட்ட பெரும் காட்டுத்தீயினால் 2000 ஏக்கர்களுக்கு மேற்பட்ட நிலப்பரப்பு எரிந்து நாசமடைந்தன.

2011 – சப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து புக்குசிமா டா இச்சி அணு உலை வெடித்தது.

2014 – நியூயார்க்கில் ஏற்பட்ட வாயு வெடிப்பில் 8 பேர் உயிரிழந்தனர், 70 பேர் காயமடைந்தனர்.