
மார்ச் 17 கிரிகோரியன் ஆண்டின் 76 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 77 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 289 நாட்கள் உள்ளன.
இன்றைய தின நிகழ்வுகள்
கிமு 45 – தனது கடைசி வெற்றியில் யூலியசு சீசர் முண்டா நகர சமரில் டைட்டசு லபீனசின் பொம்பெய் படைகளை வென்றான்.
180 – மார்க்கசு ஆரேலியசு இறந்ததை அடுத்து அவரது மகன் கொம்மோடசு தனது 18-வது அகவையில் உரோமைப் பேரரசரானார்.
455 – பெத்ரோனியசு மாக்சிமசு மேற்கு உரோமைப் பேரரசராக முடி சூடினார்.
1776 – அமெரிக்கப் புரட்சி: பிரித்தானியப் படைகள் மசாசுசெட்சின் பாஸ்டன் நகர முற்றுகையை முடித்து வெளியேறினர்.
1805 – நெப்போலியன் தலைவனாக இருந்த இத்தாலியக் குடியரசு, இத்தாலியப் பேரரசு ஆனது. நெப்போலியன் அதன் பேரரசன் ஆனான்.
1824 – இலண்டனில் இடம்பெற்ற ஆங்கிலோ-இடச்சு உடன்பாட்டை அடுத்து மலாய் தீவுக் கூட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. மலாய் தீபகற்பம் பிரித்தானியரின் கீழும், சுமாத்திரா, சாவகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் இடச்சின் கீழும் வநதன.
1845 – இரப்பர் பட்டி கண்டுபிடிக்கப்பட்டது.
1861 – இத்தாலி இராச்சியம் உருவானது.
1891 – பிரித்தானியாவின் யூட்டோப்பியா என்ற கப்பல் ஆன்சன் என்ற ஆத்திரேலியக் கப்பலுடன் கிப்ரால்ட்டர் கரையில் மூழ்கியதில் 562 பேர் உயிரிழந்தனர்.
1919 – றோவ்லட் சட்டத்தை எதிர்த்துப் பிரச்சாரம் செய்வதற்காக மகாத்மா காந்தி சென்னை வந்தார்.
1939 – இரண்டாம் சீன-சப்பானியப் போர்: குவோமின்டாங், சப்பான் இரண்டுக்கும் இடையே நான்சாங் சமர் இடம்பெற்றது.
1941 – வாசிங்டன் தேசிய கலைக்காட்சியகம் அரசுத்தலைவர் பிராங்க்ளின் ரூசவெல்ட்டினால் திறந்து வைக்கப்பட்டது.
1942 – பெரும் இன அழிப்பு: மேற்கு உக்ரேனின் லிவிவ் என்ற இடத்தைச் சேர்ந்த யூதர்கள் கிழக்கு போலந்தில் பெல்செக் என்ற இடத்தில் வைத்து நாட்சி செருமனியரினால் நச்சு வாயு செலுத்தப்பட்டுக் கொல்லப்பட்டனர்.
1948 – பெல்ஜியம், பிரான்சு, லக்சம்பர்க், நெதர்லாந்து, ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகள் பிரசெல்சு உடன்பட்டில் கையெழுத்திட்டன.
1950 – கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் “கலிபோர்னியம்” என்ற 98-வது தனிமத்தைக் கண்டுபிடித்ததாக அறிவித்தனர்.
1957 – பிலிப்பீன்சு, சேபு என்ற இடத்தில் வானூர்தி ஒன்று விபத்துக்குள்ளாகியதில், பிலிப்பீன்சு அரசுத்தலைவர் ரமோன் மக்சேசே உட்பட 24 பேர் உயிரிழந்தனர்.
1958 – ஐக்கிய அமெரிக்கா வங்கார்ட் 1 செயற்கைக்கோளை ஏவியது.
1959 – 14வது தலாய் லாமா டென்சின் கியாட்சோ, திபெத்தில் இருந்து வெளியேறி இந்தியா வந்து சேர்ந்தார்.
1960 – அமெரிக்க அரசுத்தலைவர் டுவைட் டி. ஐசனாவர் கியூபாவுக்கு எதிரான மறைமுகத் தாக்குதலுக்கான தேசிய பாதுகாப்பு சபையின் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார். இது பன்றிகள் விரிகுடா படையெடுப்புக்கு வழிவகுத்தது.
1963 – பாலித் தீவில் ஆகூங்கு எரிமலை வெடித்ததில் 1,100 பேர் உயிரிழந்தனர்.
1966 – காணாமல் போன ஐக்கிய அமெரிக்காவின் ஐதரசன் குண்டை ஆல்வின் என்ற நீர்மூழ்கிக் கப்பல் மத்திய தரைக் கடல்பகுதியில் எசுப்பானியாவுக்கு அருகில் கண்டுபிடித்தது.
1968 – அமெரிக்காவின் ஊட்டா மாநிலத்தில் நரம்பு வாயுவை சோதித்ததில் 6,000 இற்கும் அதிகமான ஆடுகள் இறந்தன.
1970 – மை லாய் படுகொலைகள் தொடர்பான தகவல்களை வெளியிடாமல் மறைத்த குற்றத்துக்காக அமெரிக்க இராணுவம் 14 இராணுவ அதிகாரிகள் மீது குற்றம் சாட்டியது.
1988 – கொலம்பியாவின் போயிங் விமானம் ஒன்று வெனிசுவேலாவின் எல்லையில் உள்ள மலை ஒன்றில் மோதியதில் 143 பேர் உயிரிழந்தனர்.
1988 – எரித்திரியாவில் எரித்திரிய மக்கள் விடுதலை முன்னணியினர் எதியோப்பிய இராணுவ நிலைகளை நோக்கி மும்முனைத் தாக்குதலை ஆரம்பித்தனர்.
1992 – ஆர்ஜெண்டீனாவில் இசுரேல் தூதரகத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுவெடிப்பில் 29 பேர் கொல்லப்பட்டு 242 பேர் படுகாயமடைந்தனர்.
1992 – தென்னாப்பிரிக்காவில் இனவொதுக்கலை முடிவுக்குக் கொண்டுவர நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில் 68.7% மக்கள் ஆதரவாக வாக்களித்தனர்.
1996 – இலங்கை அணி ஆத்திரேலியாவைத் தோற்கடித்து துடுப்பாட்ட உலகக் கிண்ணத்தை வென்றது.
2000 – உகாண்டாவில் கடவுளின் பத்துக் கட்டளைகளை மேம்படுத்தும் மத இயக்கம் ஒன்றின் உறுப்பினர்கள் 800 பேர் வரையில் அவ்வியக்கத் தலைவர்களினால் படுகொலை செய்யப்பட்டனர்.
2004 – கொசோவோவில் இடம்பெற்ற வன்முறைகளில் 22 பேர் உயிரிழந்து, 200 பேர் காயமடைந்தனர். செர்பியாவில் 35 தேவாலயங்கள், இரண்டு பள்ளிவாசல்கள் சேதமாக்கப்பட்டன.