• Sun. Apr 21st, 2024

வரலாற்றில் இன்று செப்டம்பர் 24

Sep 24, 2021

செப்டம்பர் 24 கிரிகோரியன் ஆண்டின் 267 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 268 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 98 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

787 – நைசியாவின் இரண்டாவது பேரவை ஏகியா சோபியா திருச்சபையில் இடம்பெற்றது.

1645 – முதலாம் சார்லசு மன்னர் தலைமையிலான படைகளை ராவ்ட்டன் கீத் சமரில் நாடாளுமன்றப் படைகள் வென்றன.

1674 – பேரரசர் சிவாஜியின் இரண்டாவது முடிசூட்டு விழா (தாந்திரீக சடங்கு) இடம்பெற்றது.

1789 – அமெரிக்க உச்சநீதிமன்றம் நிறுவப்பட்டது.

1799 – கட்டபொம்மனும் இன்னும் 6 பேரும் புதுக்கோட்டை அரசன் விஜயரகுநாத தொண்டைமானால் கைது செய்யப்பட்டுப் பின்னர் செப் 29இல் ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

1840 – இலங்கை வங்கி தொடங்கப்பட்டது.

1841 – புருணை சுல்தான் சரவாக் இராச்சியத்தை பிரித்தானியாவிடம் கையளித்தார்.

1852 – நீராவி இயந்திரத்தில் உருவாக்கப்பட்ட முதலாவது வான்கப்பல் பாரிசில் இருந்து திராப்பெசு வரை 17 மைல் தூரம் பறந்தது.

1853 – மெலனீசியாவில் உள்ள நியூ கலிடோனியா தீவுகளை பிரான்சு கைப்பற்றியது.

1869 – ஜேய் கூல்ட், ஜேம்ஸ் பிஸ்க் என்ற இரு செல்வந்தர்களின் சூழ்ச்சியை முறியடிக்க அமெரிக்கா பெருமளவு தங்கத்தை விற்பனைக்கு விட்டதில், தங்க விலை சரிந்தது.

1890 – இறுதிக்காலத் தூயோரின் இயேசு கிறித்து சபை பலதுணை மணத்தைக் கைவிட்டது.

1898 – அமெரிக்க மிசன் யாழ்ப்பாணம், இணுவிலில் பெண்களுக்கான மக்லியொட் மருத்துவமனையை அமைத்தது.

1906 – வயோமிங்கில் உள்ள பேய்க் கோபுரம் அமெரிக்காவின் முதலாவது தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.

1932 – பூனா ஒப்பந்தம்: மாநில சட்டமன்றங்களில் தலித்துகளுக்கு சிறப்பு இட ஒதுக்கீட்டுக்கு மகாத்மா காந்தி, அம்பேத்கர் ஆகியோர் ஒப்புதல் அளித்தனர்.

1946 – கதே பசிபிக் நிறுவனம் ஆங்காங்கில் ஆரம்பிக்கப்பட்டது.

1948 – ஒண்டா நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.

1950 – காட்டுத்தீ கனடா, மற்றும் புதிய இங்கிலாந்தின் பெரும் பகுதியை மூடியது. நீல நிலவு ஐரோப்பா வரை தெரிந்தது.

1960 – அணுவாற்றலில் இயங்கும் உலகின் முதலாவது வானூர்தி தாங்கிக் கப்பல் “என்டர்பிரைசு” அமைக்கப்பட்டது.

1968 – சுவாசிலாந்து ஐநாவில் இணைந்தது.

1972 – இலண்டனில் இருந்து புறப்பட்ட யப்பான் ஏர்லைன்சு 472 வானூர்தி மும்பை சாண்டாகுரூசு வானூர்தி நிலையத்தில் இறங்குவதற்குப் பதிலாக சிறிய ஜூகு வானூர்தி நிலையத்தில் தரையிறங்கி பெரும் சேதமடைந்தது. 11 பேர் காயமடைந்தனர்.

1973 – கினி-பிசாவு போர்த்துக்கலிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1990 – சனிக் கோளில் பெரும் வெண் புள்ளி ஒன்று தொடர்ச்சியாக அவதானிக்கப்பட்டது.

1993 – கம்போடியாவில் மன்னராட்சி மீண்டும் நிறுவப்பட்டு, நொரடோம் சீயனூக் மன்னராக முடிசூடினார்.

1996 – ஐக்கிய நாடுகள் அவையில் 71 நாடுகளின் பிரதிநிதிகள் முழுமையான அணுகுண்டு சோதனைத் தடை உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.

2007 – பர்மாவில் யங்கோன் நகரில் 30,000 முதல் 100,000 வரையானோர் பர்மிய இராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2008 – தாபோ உம்பெக்கி தென்னாப்பிரிக்க அரசுத்தலைவர் பதவியில் இருந்து விலகினார்.

2013 – தெற்குப் பாக்கித்தானில் 7.7-அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 327 பேர் உயிரிழந்தனர்.

2014 – மங்கல்யான் விண்கலம் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தினால் வெற்றிகரமாக செவ்வாய் சுற்றுவட்டத்தில் செலுத்தப்பட்டது.

2015 – சவூதி அரேபியாவில் ஹஜ் பயணத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 1,100 பேர் உயிரிழந்தனர், 934 பேர் காயமடைந்தனர்.