• Tue. Apr 16th, 2024

இலண்டன் தீ விபத்தில் இலங்கை தமிழ் குடும்பம் பலி

Nov 19, 2021

இலண்டனின் தென்கிழக்கு பகுதியில் வீடு தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில் இரண்டு சிறுவர்கள் உட்பட இலங்கை தமிழ் குடும்பத்தை சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளனர்.

இலண்டனில் தென்கிழக்கில் உள்ள Hamilton Road in Bexleyheathபகுதியில் வீடொன்றில் தீப்பிடித்த சம்பவத்திலேயே இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

வீடு முழுமையாக தீயில் சிக்கியிருந்ததையும் வீட்டிற்குள் இருந்து அலறல்களையும் வீட்டிற்கு வெளியே ஒருவர் கடும் கவலையால் மயங்கி விழுந்ததையும் பார்த்ததாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

வியாழக்கிழமை இரவு 8.30 மணியளவில் உள்ள வீட்டிற்கு ஆறு தீயணைப்பு வண்டிகளையும் 40 தீயணைப்பு வீரர்களையும் அனுப்பியதாக லண்டன் பயர் பிரிகேட் தெரிவித்துள்ளது.

தீயணைப்பு வீரர்கள் ஒன்பது மீற்றர் ஏணியை பயன்படுத்தி முதலாவது மாடியிலிருந்து இரண்டு பெண்களையும் இரு குழந்தைகளையும் உயிருடன் மீட்டுள்ளனர் எனினும் அவர்கள் பின்னர் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் இரு கைக்குழந்தைகள் உள்ளதாக தெரிவித்துள்ள தீயணைப்பு படையினர் அவர்கள் உறவினர்கள் என தெரிவித்துள்ளனர்.

தீயணைப்பு படையினர் வருவதற்கு முன்னர் அந்த கட்டிடத்திலிருந்து வெளியேறிய ஒருவர் கால் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.