
கனடாவில் நடந்த சாலை விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த 5 மாணவர்கள் பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சனிக்கிழமையன்று அதிகாலையில் கனடாவின் டொரன்டோ பகுதியில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில் பயணிகள் வேனில் இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் பயணம் செய்துள்ளனர். அப்போது எதிரே வந்த டிராக்டரில் வேன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் இந்திய மாணவர்கள் ஹர்பிரீத் சிங், ஜஸ்பிந்தர் சிங், கரன்பால் சிங், மோஹித் சவுகான் மற்றும் பவன் குமார் ஆகிய 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ள கனடாவுக்கான இந்திய ஆணையர் அஜய் பிசாரியா உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.