• Tue. Mar 26th, 2024

தொல்லியல் ஆய்வுகளுக்காக ₹7 கோடி ஒதுக்கீடு

Mar 18, 2022

தமிழ்நாடு ஆண்டு பட்ஜெட் சட்டமன்றத்தில் வாசிக்கப்பட்டு வரும் நிலையில் தொல்லியல் ஆய்வுகளுக்கு சிறப்பு கவனம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு 2022-23ம் ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட் இன்று தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார்.

இதில் தொல்லியல் ஆய்வுகளுக்கு சிறப்பு கவனம் அளிக்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழர்களின் தொன்மையை பறைசாற்ற கீழடி, சிவகளை, கங்கைகொண்ட சோழபுரம் உள்ளிட்ட 7 இடங்களில் அகழாய்வு மற்றும் 2 இடங்களில் தல ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.

இதற்காக தொல்லியல் ஆய்வுகளுக்காக ₹7 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம், ராமநாதபுரத்தில் ₹10 கோடி செலவில் அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. நவீன முறையில் நில அளவை பணிகளை மேற்கொள்ள ரோவர் இயந்திரம் வாங்க ₹15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.