• Mon. Mar 25th, 2024

இந்தியாவிற்குள் அத்து மீறி நுழைந்த சீனப்படைகள்

Sep 29, 2021

இந்தியா-சீன படைகள் இடையே லடாக் எல்லையில் கடந்த ஆண்டு மே 5-ம் தேதி மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 43 வீரர்கள் மரணமடைந்திருக்கலாம் அல்லது காயமடைந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து இருநாட்டுகளும் எல்லையில் படைகளை குவித்தன. பின்னர் நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் எல்லைப்பகுதியில் இருந்து வீரர்கள் திரும்பப்பெறப்பட்டனர். ஆனாலும், தொடர்ந்து லடாக் எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் இரு நாடுகளும் படைகளை அங்கு நிலைநிறுத்தியுள்ளன.

இந்நிலையில், இந்திய எல்லைக்குள் கடந்த மாதம் சீனப்படைகள் அத்துமீறி நுழைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 30-ம் தேதி உத்தரகாண்ட் மாநிலம் பரஹோடி பகுதிக்குள் சுமார் 100 சீன ராணுவ வீரர்கள் நுழைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய எல்லைக்குள் சீன வீரர்கள் அத்துமீறி நுழைந்தது குறித்து பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்தோ-தீபெத் எல்லைப்பாதுகாப்பு படையினர் பரஹோடி பகுதிக்கு விரைந்துள்ளனர். ஆனால், சில மணிநேரங்கள் பரஹோடி பகுதிக்குள் நுழைந்திருந்த சீன படையினர் இந்திய படையினர் வருவதற்குள் இந்திய எல்லையில் இருந்து பின்வாங்கி தங்கள் நாட்டிற்கே சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து அப்பகுதியில் இந்திய படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

லடாக் விவகாரத்தில் இந்தியா-சீனா இடையே மோதல் நீடித்து வரும் சூழ்நிலையில் மீண்டும் இந்திய எல்லைக்குள் சீன படைகள் நுழைந்துள்ள சம்பவம் இருநாட்டு இடையேயான மோதலை அதிகரிக்கும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.