• Fri. Mar 29th, 2024

இலங்கையில் சர்ச்சைக்குள்ளான மலைய சிறுமி விவகாரம்; முதன்முறையாக வாய் திறந்த ரிஷாட் பதியூதீன்

Aug 5, 2021

என்னுடைய வீட்டிலே பணிபுரிந்த நிலையில் தீக்காயங்களுக்கு இலக்காகி உயிரிழந்த தங்கை ஹிசாலினியின் மரணம் எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் மிகுந்த மனைவேதனையை அளித்திருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் தெரவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

என்னுடைய சகோதரி 34 வயதில் புற்றுநோயால் இறந்த போது எவ்வாறான துன்பத்தையும் வேதனையையும் தந்ததோ அதே போன்றதொரு வேதனையைத்தான் ஹிசாலினியின் மரணமும் எனது குடும்பத்திற்கு ஏற்படுத்தியுள்ளது.

16 வயது பூர்த்தியடைந்த பின்னர் தான் ஹிசாலினி எங்களுடைய வீட்டிற்கு வேலைக்காக தரகர் ஒருவரின் மூலம் வந்தார். அவர் பணிக்கு வரும்போது சிறுமியின் தாயாரோ குடும்பத்தாரோ , இஷாலினி யாரின் வீட்டில் பணி புரிய போகின்றார், தங்குமிடம் எவ்வாறு உள்ளது என்பதை அவதானித்துச் செல்லவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனினும் ஒரு தனிநபர் வாழ்வதற்கான அறை, அதற்கு அருகில் குளியலறையோடு ஒழுங்கான கட்டமைப்போடு அவருக்கு வீட்டு ஏற்பாட்டை நாங்கள் செய்து கொடுத்திருக்கின்றோம்.

கடந்த பத்து வருட காலமாக எமது வீட்டில் பணியாற்றுபவர்கள் அங்குதான் வாழ்ந்து வந்திருக்கின்றனர்.

இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 3ஆம் திகதி 6.45 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது.

எனது மாமனாரும் அவரின் மனைவியும் உறங்கச் சென்ற வேளை சிறுமியின் கதறல் கேட்டு வெளியில் வந்து பார்த்தபோது சிறுமி தீப்பற்றிய நிலையில் இருந்துள்ளார்.

இந்நிலையில் சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் நடுநிலையான விசாரணைகளை நடத்தும்படியும் ரிஷாட் பதியூதீன் வலியுறுத்தியுள்ளார்.