
கதிர்காமம் கந்தன் ஆலயத்தின் பல மில்லியன் ரூபா பெறுமதியான மாணிக்கக் கல் காணாமல் போயுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இரத்தினபுரி பிரதேசத்தில் உள்ள இரத்தினக்கல் வர்த்தகர் ஒருவரால் கதிர்காமம் ஆலயத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 5 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான மாணிக்கக் கல் காணாமல் போயுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, கதிர்காமம் ஆலயத்திற்குக் காணிக்கை யாகச் செலுத்தப்பட்ட 38 பவுண் தங்கத் தட்டு காணாமல் போனமை தொடர்பில் அங்கொட லொக்காவின் மனைவியிடம் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் நேற்று வாக்குமூலம் பெற்றுக் கொண்டுள்ளனர்.
அங்கொட லொக்காவின் மகனின் தோஷத்தை போக்குவதற்காக 2019 ஆம் ஆண்டு ஜூலை 3 ஆம் திகதி கதிர்காமம் ஆலயத்துக்குக் குறித்த தங்கத் தட்டு காணிக்கையாகச் செலுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கடந்த ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி குறித்த தங்கத் தட்டு காணாமல் போயுள்ளதாகக் கதிர்காமம் ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமேக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து பஸ்நாயக்க நிலமே கடந்த ஒக்டோபர் 18 ஆம் திகதி பொலிஸ் மா அதிபர் சீ.டி. விக்ரமரத்னவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனடிப்படையில் இது சம்பந்தமாக விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபர் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.