• Wed. Mar 27th, 2024

பயணத் தடை தளர்த்தப்படுமா – இராணுவத் தளபதி

Jun 6, 2021

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத் தடை தளர்த்தப்படுமா என்பது குறித்து எதிர்வரும் 14ம் திகதிக்கு முன்னதாக அறிவிக்கப்படும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கோவிட் பரவலைக் கட்டுப்படுத்த இருக்கும் இலகுவான வழிமுறை நாட்டை முடக்குவதென்றால் அந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தியாக வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“நாடளாவிய ரீதியில் நாளாந்தம் 2500க்கு மேற்பட்ட கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். கோவிட் மரணங்களும் அதிகரித்துள்ளதாக சுகாதாரத் தரப்பினர் தொடர்ச்சியாக எமக்கு வலியுறுத்தினர்.

இந்நிலையில், தற்போது நாட்டைத் திறப்பது ஆரோக்கியமான விடயமல்ல என்பது எமக்கும் தென்பட்டது. ஏற்கனவே இரண்டு வாரங்கள் பயணத் தடை பிறப்பிக்கப்பட்டாலும் கூட அதில்முறையாக மக்கள் செயற்படாத நிலையொன்று காணப்பட்டது.

அதன் பின்னரும் ஒரு சில பகுதிகளில் மக்களின் அநாவசியச் செயற்பாடுகளை அவதானிக்க முடிந்தது. எனவே தான் 7ம் திகதி வரையில் பிறப்பிக்கப்பட்டிருந்த பயணத்தடையை மேலும் ஒரு வார காலம் நீடிக்கத் தீர்மானித்தோம்.

இந்தத் தீர்மானமானது ஜனாதிபதியின் தனித் தீர்மானமோ அல்லது நான் எடுத்த தனித்தீர்மானமோ அல்ல. நாட்டிலுள்ள விசேட வைத்திய நிபுணர்கள் மேற்கொள்ளும் ஆய்வுகளுக்கு அமைய, கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படுகின்றது.

ஏற்கனவே 14 நாட்கள் பயணத் தடை பிறப்பிக்கப்பட்டாலும் கூட 21 நாட்கள் தொடர்ச்சியாகக் கட்டுப்பாடுகளை விதித்தால் மட்டுமே முழுமையான பெறுபேறுகள் வெளிப்படும்.

21 நாட்களுக்குப் பின்னரும் பயணத்தடை நீடிக்குமா? தளருமா? என்பது தொடர்பில் எதிர்வரும் 14ம் திகதிக்கு முன் அறிவிப்போம். கோவிட் பரவலைக் கட்டுப்படுத்த இருக்கும் சரியான வழிமுறை நாட்டை முடக்குவதென்றால் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.

இதனால் மக்களுக்கு சிரமங்கள் ஏற்படும். ஆனால், அதனையும் தாண்டி மக்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டே செயற்படுகின்றோம்” என அவர் தெரிவித்துள்ளார்.