• Fri. Apr 19th, 2024

தாய்வான் அருகே சீன இராணுவப் படைகள் போர் பயிற்சி

Nov 11, 2021

அமெரிக்க காங்கிரஸின் பிரதிநிதிகள் குழுவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தாய்வான் அருகே சீன இராணுவப் படைகள் போர் பயிற்சிகளை நடத்தி வருகின்றன.

தாய்வான் ஜலசந்தி பகுதியில் மேற்கொள்ளப்படும் பயிற்சிகள் தேசிய இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான அவசியமான நடவடிக்கை என்று சீனாவின் பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

எனினும், பயிற்சிகளின் நேரம், பங்கேற்பாளர்கள் மற்றும் இடம் பற்றிய எந்த விபரங்களையும் அது வெளியிடவில்லை.

தங்களை மீறி தைவானுடன் பிற நாடுகள் தூதரக உறவு கொள்வதற்கு சீனா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. எனினும், தாய்வானுடன் அதிகாரபூர்வமற்ற தூதரக மற்றும் இராணுவ நட்புறவை அமெரிக்கா பேணி வருகிறது.

சீனாவில் கடந்த 1949இல் நடந்த உள்நாட்டுப்போருக்கு பிறகு தாய்வான் தனிநாடாக உருவானது. ஆனாலும் தாய்வான், சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என சீன அரசாங்கம் கூறி வருகிறது.

எனினும் தாய்வான், சீனாவின் கட்டுப்பாட்டில் இல்லை. ஜனநாயக முறையிலான அரசாங்கம் தான் அங்கு ஆட்சி அதிகாரத்தில் உள்ளது.

ஆனால், தேவை ஏற்பட்டால் சீனக் கடற்கரையில் இருந்து சுமார் 200 கி.மீ. தொலைவில் உள்ள தாய்வானை கைப்பற்ற படை பலத்தை பயன்படுத்தவும் தயங்க மாட்டோம் என சீனா மிரட்டியும் வருகிறது.

இந்த சூழலில் கடந்த 72 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீனா- தாய்வான் இடையிலான இராணுவ பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதனிடையே, எதிர்வரும் 2025ஆம் ஆண்டுக்குள் தங்கள் நாட்டை சீனா ஆக்கிரமிக்கக் கூடும் என்று தாய்வான் பாதுகாப்புத் துறை அமைச்சர் சியு குவோ-செங்கும் அச்சம் தெரிவித்துள்ளார்.