• Sat. Apr 20th, 2024

உக்ரைன் மீதான ரஷியாவின் போர் : ஐ.நா அவசர கூட்டம்

Feb 28, 2022

உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 5-வது நாளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், உக்ரைன் மீதான ரஷியாவின் போர் நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை போடுவது தொடர்பாக விவாதிக்க ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலின் சிறப்பு அவசர கூட்டம் இன்று(28) நள்ளிரவு கூடுகிறது .

முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற ஐ .நா. பொதுசபையின் கூட்டத்தில், அமெரிக்கா மற்றும் அல்பேனியா நாடுகள் இணைந்து ரஷியாவுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் அவையில் தீர்மானத்தை கொண்டு வந்தன. இதனை தொடர்ந்து, ரஷியாவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீது 15 நாடுகள் கொண்ட ஐ .நா. பொதுசபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் வாக்கெடுப்பு நடைபெற்றது.

இந்த வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை.15 உறுப்பினர்கள் கொண்ட இந்த பாதுகாப்பு கவுன்சிலில், 11 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தன. ஆனால், சீனா, இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் வாக்களிக்கவில்லை.

இந்த நிலையில், ரஷ்யா – உக்ரைன் போர் குறித்து விவாதிக்க ஐ.நா. பொதுசபையின் 11வது சிறப்புக்கூட்டம் இன்று இரவு (இந்திய நேரப்படி 8.30 மணிக்கு) கூடுகிறது. 40 ஆண்டுகளில் முதல் முறையாக அவசரக்கூட்டம் நியூயார்க்கில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் ரஷியாவுக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் வகையில் முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.