• Wed. Apr 17th, 2024

விம்பிள்டன் 2021 – 20 ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார் ஜோகோவிச்

Jul 12, 2021

2021 விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் நோவக் ஜோகோவிச், மேட்டியோ பெரெட்டினியை வீழ்த்தி 20 ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார்.

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டம் உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும் ஆம் நிலை வீரருமான இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினியும் மோதினர்.

3 மணி நேரம் 23 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில், 34 வயதான ஜோகோவிச் 6-7,6-4,6-4 6-3 என்ற செட் கணக்கில் பெரேட்டினியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

நடப்பு ஆண்டில் அவுஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன் ஆகியவற்றை தொடர்ந்து விம்பிள்டன் பட்டத்தையும் தற்சமயம் கைப்பற்றியுள்ளார் ஜோகோவிச்.

தற்சமயம் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற மார்கரெட் கோர்ட் (24), செரீனா வில்லியம்ஸ் (23) மற்றும் ஸ்டெஃபி கிராஃப் (22) ஆகியோரை தொடர்ந்து ஜோகோவிச் நான்காவது இடத்தில் உள்ளார்.

இந் நிலையில் ஜோகோவிச்சால் 25 கிராண்ட் ஸ்லாம்களை வெல்ல முடியும் என்று டென்னிஸ் ஜாம்பவான் ஜோன் மெக்கன்ரோ கூறியுள்ளார்.