• Thu. Mar 28th, 2024

கடைசி ஓவரில் சொதப்பிய பஞ்சாப் – ராஜஸ்தான் வெற்றி!

Sep 22, 2021

நேற்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணியின் கையில் வெற்றி இருந்த நிலையில் கடைசி ஓவரில் சொதப்பிய காரணத்தினால் பரிதாபமாக வெற்றியை கோட்டை விட்டது.

நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 185 ரன்கள் எடுத்தது. ஜெய்ஸ்வால் மிக அபாரமாக விளையாடி 49 ரன்கள் எடுத்தார்.

இதனையடுத்து 186 என்ற இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணியின் மயங்க் அகர்வால் 67 ரன்களும் கேஎல் ராகுல் 49 ரன்களும் எடுத்து நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். அதன்பின் விளையாடிய பூரன் மற்றும் மார்க்கம் ஆகியோர்களும் ஓரளவு நிலைத்து ஆடி நிலையில் கடைசி ஓவரில் மட்டும் சொதப்பியதால் அந்த அணி தோல்வி அடைந்தது.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 4 ரன்கள் தேவை என்ற நிலையில் ஒரே ஒரு ரன் மட்டுமே எடுத்து 2 விக்கெட்டை இழந்ததால் பஞ்சாப் அணி நேற்று 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. கடைசி ஓவரை மிக அபாரமாக வீசிய ராஜஸ்தானின் கார்த்திக் தியாகி ஆட்டநாயகன் விருதை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.