• Thu. Mar 28th, 2024

கால் இறுதிக்குள் நுழைந்தார் பிவி சிந்து

Mar 25, 2022

சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள பாசெல் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் காஷ்யப், நம்பர் ஒன் வீரரும், ஒலிம்பிக் சாம்பியனுமான விக்டர் ஆக்சல்சென்னை (டென்மார்க்) சந்திக்க இருந்தார்.

ஆனால் கடைசி நேரத்தில் உடல் நலக்குறைவு காரணமாக ஆக்சல்சென் இந்த போட்டியில் இருந்து விலகினார். இதனால் காஷ்யப் போட்டியின்றி கால்இறுதிக்குள் நுழைந்தார்.

மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் பிரனாய் 19-21, 21-13, 21-19 என்ற செட் கணக்கில் பின்லாந்து வீரரான கலே கோல்ஜோனெனை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார். நாளை நடைபெற உள்ள கால்இறுதியில் பிரனாய் சகநாட்டு வீரரான காஷ்யப்புடன் மோத இருக்கிறார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில், நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பிவி சிந்து, துருக்கி வீராங்கனை நெஸ்லிஹன் இகிட் – உடன் மோதினார். 42 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிந்து 21-19, 21-14 என்ற செட் கணக்கில் நெஸ்லிஹன்னை வீழ்த்தி கால் இறுதிக்குள் நுழைந்தார்.

இரட்டையர் பிரிவின் 2-வது சுற்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி 19-21, 20-22 என்ற நேர்செட்டில் இந்தோனேஷியாவின் பிரமுத்யா குசுமவர்தனா-எரேமியா எரிச் ரம்பிடன் இணையிடம் தோற்று வெளியேறியது.