• Fri. Feb 14th, 2025

ஐபிஎல் போட்டியில் புதிதாகச் சேர்க்கப்பட்ட இரு அணிகள்

Jan 11, 2022

அகமதாபாத் அணியின் தலைவனான ஹார்திக் பாண்டியா தேர்வாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் போட்டியில் இரு அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. அடுத்த வருடம் முதல் லக்னௌ, ஆமதாபாத் நகரங்களை அடிப்படையாகக் கொண்டு இரு புதிய அணிகள் இணைகின்றன. இதில் லக்னௌ அணியை, கொல்கத்தாவைச் சோ்ந்த தொழிலதிபரான சஞ்சீவ் கோயங்காவின் ஆா்.பி.எஸ்.ஜி. குழுமம் ரூ. 7,090 கோடிக்கு வாங்கியுள்ளது.

அகமதாபாத் அணியைச் சா்வதேசப் பங்கு முதலீட்டு நிறுவனமான சிவிசி கேபிடல் ரூ. 5,600 கோடிக்குச் சொந்தமாக்கியுள்ளது. ஆா்.பி.எஸ்.ஜி. குழுமம் ஏற்கெனவே கடந்த 2016 – 17 காலகட்டத்தில் ரைசிங் புணே சூப்பா் ஜெயன்ட் அணி உரிமையாளராக இருந்தது.

பழைய 8 அணிகளும் தக்கவைத்துக் கொண்ட வீரா்களின் பட்டியல் சமீபத்தில் வெளியானது. சிஎஸ்கே அணியில் ஜடேஜா, தோனி, மொயீன் அலி, ருதுராஜ் கெய்க்வாட் போன்றோர் தக்கவைக்கப்பட்டுள்ளார்கள். ஐபிஎல் ஏலத்துக்கு முன்பு உள்ள வீரர்களின் பட்டியலில் இருந்து 3 வீரர்களைத் தேர்வு செய்துகொள்ள இரு புதிய அணிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் 2022 போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் பிப்ரவரி 12, 13 திகதிகளில் நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி மாத இறுதிக்கு முன்பு ஏலத்தில் பங்கு பெறும் வீரர்களின் பட்டியல் வெளியாகும் எனத் தெரிகிறது.

லக்னெள அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பிரபல முன்னாள் வீரர் ஆன்டி ஃபிளவரும் ஆலோசகராக கெளதம் கம்பீரும் உதவிப் பயிற்சியாளராக இந்திய முன்னாள் வீரர் விஜய் தாஹியாவும் சமீபத்தில் நியமிக்கப்பட்டார்கள்.

இந்நிலையில் ஆமதாபாத் தேர்வு செய்துள்ள மூன்று வீரர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளன. ஹார்திக் பாண்டியா, ரஷித் கான், இஷான் கிஷன் ஆகிய வீரர்களை ஆமதாபாத் அணி தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அகமதாபாத் அணியின் தலைவனாக ஹார்திக் பாண்டியா தேர்வாகியுள்ளதாகவும் தெரிகிறது.

இரு புதிய அணிகளும் ஜனவரி 15 க்குள் தேர்வு செய்த வீரர்களின் பட்டியலை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.