• Fri. Apr 19th, 2024

அதிரடியாக கைதுசெய்யப்பட்ட நடிகை மீரா மிதுன்

Aug 14, 2021

மக்கள் தொடர்பாக அவதூறு பரப்பும் வகையில் பேசி வீடியோ வெளியிட்ட நடிகை மீரா மிதுன் கேரளாவில் பதுங்கியிருந்த நிலையில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழில், 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்தி மாறி ஆகிய படங்களில் நடித்திருப்பவர் நடிகை மீரா மிதுன். இவர் அவ்வப்போது சர்ச்சைக் கருத்துகளைச் சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம்.

இந்நிலையில் சமீபத்தில் பட்டியலின மக்கள் மற்றும் திரைத்துறையில் பணியாற்றும் பட்டியலினத்தவர்கள் தொடர்பாக அவதூறு பரப்பும் வகையிலும் பேசி வீடியோ வெளி யிட்டிருந்தார்.

இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகள் புகார் அளித்திருந்தன. இந்தப் புகாரின் அடிப்படையில் மீரா மிதுன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பினர்.

இதுதொடர்பாக மீரா மிதுன் வெளியிட்ட வீடியோவில்,

“தாராளமாக என்னை கைது செய்யுங்கள். ஏன் காந்தி, நேரு எல்லாம் சிறைக்கு போகவில்லையா? ஆனால், என்னை கைது செய்வது என்பது நடக்காது. அப்படி நடந்தால் அது கனவில் தான் நடக்கும். பட்டியலின மக்களை ஒட்டுமொத்தமாக தவறானவர்கள் என்று நான் சொல் லவில்லை. அந்த மக்களில் எனக்கு தொந்தரவு கொடுத்தவர்களையே தவறானவர்கள் என்று சொன்னேன்” என்று குறிப்பிட்டார்.

தான் ஒரு தமிழ் சாதி பெண் என்பதால்தான் தனக்கு பிரச்சனை கொடுக்கின்றனர் என்ற அவர், எவ்வளவு வெற்றி பெற்றாலும் தமிழ்நாட்டில் தனக்கு தொந்தரவுகள் வந்து கொண்டுதான் இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகை மீரா மிதுன் அந்த வீடியோவில் கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்நிலையில் அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கேரளாவில் பதுங்கி இருந்த அவரை கைது செய்த சைபர் கிரைம் போலீசார், சென்னை அழைத்து வருகின்றதாக கூறப்படுகின்றது.