• Thu. Apr 18th, 2024

ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் கார் விவகாரம்; விஜய்யின் மேல்முறையீட்டுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி

Jul 22, 2021

வெளிநாட்டு சொகுசு காருக்கு நுழைவு வரி, அபராதம் ஆகியவற்றைப் பெறத் தடை கோரியும், உத்தரவு நகல் இல்லாமல் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக் கோரியும் நடிகர் விஜய் தொடுத்த மேல்முறையீட்டுக்கு வழக்கு எண் வழங்கப் பதிவுத்துறைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விஜய் 2012ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு காரைப் பதிவு செய்ய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை அணுகிய போது, நுழைவு வரி செலுத்த வணிக வரித்துறை உத்தரவிட்டது.

இதை எதிர்த்து விஜய் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியம், நடிகர்கள் முறையாக உரிய நேரத்தில் வரி செலுத்த வேண்டும் என்றும், அவர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது எனக் கருத்து தெரிவித்திருந்தார்.

அத்துடன் விஜய்க்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, அதை முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு இரண்டு வாரத்தில் வழங்க உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து விஜய் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், அபராதத்தை ரத்து செய்யவும், தன்னைப் பற்றித் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள விமர்சனங்களை நீக்கவும் கோரியுள்ளார்.

அத்துடன் தனி நீதிபதியின் தீர்ப்பு நகல் இல்லாமல், மேல்முறையீட்டு மனுவை எண்ணிட்டு விசாரணைக்குப் பட்டியலிடப் பதிவுத்துறைக்கு உத்தரவிடக் கோரியும் கூடுதல் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் துரைசாமி, ஹேமலதா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, அபராதத்தைக் கட்டிவிட்டு ஜூலை 28ஆம் நாள் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளதால் மேல்முறையீட்டு மனுவை வரும் திங்கட் கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என விஜய்யின் வழக்கறிஞர் கோரினார்.

இதனையடுத்து மேல்முறையீடு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் அரசு தரப்புக்கு வழங்க விஜய்க்கு உத்தரவிட்டனர்.

தனி நீதிபதி உத்தரவு நகல் இல்லாமல் வழக்கை எண்ணிட்டு விசாரணைக்குப் பட்டியலிடப் பதிவுத்துறைக்கு உத்தரவிட்டனர். மேலும் வழக்கு எண்ணிட்ட பிறகு விசாரணைக்குப் பட்டியலிடப்படும் என்றும் தெரிவித்தனர்.