• Sun. Mar 24th, 2024

உடல் வலிகளைப் போக்க பாதங்களில் மசாஜ் செய்யுங்க!

Oct 16, 2021

தினமும் கால்கள் மற்றும் பாதங்களில் சிறிது எண்ணெய் தேய்த்து மென்மையாக மசாஜ் செய்து வந்தால் மிகப்பெரிய நன்மையைப் பெறலாம்.

பாதங்களில் செய்யும் மசாஜ் உடல் முழுவதும் உள்ள வலிகள் குறிப்பாக தலைவலி, முதுகுவலி, கழுத்து வலி, இடுப்பு வலியைப் போக்க உதவும்.

நம்முடைய உடலின் ஒட்டுமொத்த எடையும் பாதங்கள்தான் தாங்குகின்றன. பாதங்களில் மசாஜ் செய்து வந்தால் அது உடலுக்கு ஓய்வைத் தரும். பாதம் என்ற சிறிய பகுதியில் செய்யும் 10 – 15 நிமிட மசாஜ், உடல் முழுவதுக்கும் ஓய்வைத் தரும். மேலும், காலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும்.

பாதங்களில் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்வது, உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும். உடல் முழுவதுக்குமான ரத்த ஓட்டம் சீராக நடக்க உதவும். இதன் காரணமாக உடல் முழுவதுக்கும் ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த ரத்தம் செல்லும்.

பாதங்களில் மசாஜ் செய்யும் போதே பலருக்கும் தூக்கம் வந்துவிடும். ஆழ்ந்த, எந்த தொந்தரவும் இல்லாத தூக்கம் வர மசாஜ் செய்யலாம்.

தொடர்ந்து மசாஜ் செய்து வந்தால் பாதங்களில் நீர்க்கோப்பது தடுக்கப்படும். எனவே, கர்ப்பிணிகளுக்குக் கர்ப்பகாலம் முழுவதும் பாதங்களில் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்யலாம். முழுவதும் இல்லை என்றாலும் கடைசி மூன்று மாதங்களில் இப்படிச் செய்வது நல்லது.

பாதங்களில் மசாஜ் செய்வது மனதுக்கு அமைதியைத் தரும். மன அழுத்தத்தைக் குறைக்கும். பாதங்களில் சில முக்கிய புள்ளிகளில் அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்வது மன அழுத்தம், மனம் தொடர்பான பிரச்னைகளில் இருந்து விடுவிக்கும்.

பாதங்களில் தேங்காய் எண்ணெய் வைத்துத்தான் மசாஜ் செய்ய வேண்டும் என்று இல்லை. நல்லெண்ணெய், கடுகு எண்ணெய், ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய் மற்றும் எசென்ஷியல் எண்ணெய்கள் கொண்டும் மசாஜ் செய்யலாம்.