• Mon. Mar 25th, 2024

மாரடைப்பைத் தடுப்பதற்கான வழிமுறைகள்

Jan 18, 2022

உடல் முழுவதற்கும் ரத்தத்தை அளிக்கும் உறுப்பாக இதயம் இருப்பதால் உயிர் இயங்குவதற்கு அவசியமானது எனலாம். அந்தவகையில் இதயத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டால் ஏற்படும் மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் தற்போது அதிகரித்து வருகின்றன.

மாரடைப்பு என்பது இதய தசைகள் இறந்து சிதைவுறுவது. நெஞ்சுப் பகுதியில் அழுத்தம் அதிகமாவது, அதிக வியர்வை, மூச்சுத் திணறல் எனத் தொடங்கி இடது தோள்பட்டை, கைகள், தாடைகளில் வலி பரவுதல் வரை இதய நோய்க்கான அறிகுறிகள்.

ஆண்களுக்கு மட்டுமின்றி தற்போது பெண்களுக்கும் அதிகமாக மாரடைப்பு ஏற்படுகிறது. ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் அளவு அதிகரிப்பு இவற்றுக்கு முக்கியக் காரணிகளாக உள்ளன.
வாழ்க்கைச் சூழல், பணிச் சுமை, மன அழுத்தம், தூக்கமின்மை, உணவு முறைகளில் மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் மாரடைப்பு ஏற்படுகிறது.

தற்போதைய சூழ்நிலையில், மாரடைப்பு ஏற்படாமல் தடுக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன என்பது குறித்து தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. இக்காலத்தில் 35 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், ஆண்கள் அனைவருமே போதிய பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்க வேண்டும்.

  • மது அருந்துதல், புகை பிடித்தல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் எடுத்துக்கொள்ளும் அளவை படிப்படியாக குறைக்க வேண்டும்.
  • கொழுப்பு அதிகமுள்ள உணவுகளை, எண்ணெய்யில் பொரித்த உணவுகளைத் தவிர்த்துவிட வேண்டும்.
  • உப்பு, இனிப்பு அதிகமுள்ள உணவுகளை சேர்க்கக்கூடாது.
  • உடலில் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு சரியாக இருக்க வேண்டும்.
  • மன அழுத்தம் ஏற்பட்டால் உடனடியாக அதனை சரிசெய்ய முற்பட வேண்டும். முடிந்தவரை எப்போதும் மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
  • தினமும் 8 மணி நேரம் நல்ல தூக்கம் வேண்டும்.
  • நாள் ஒன்றுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்ய வேண்டும். அதிகமாக தண்ணீர் குடிக்கும்போது நுரையீரல் செயல்பாடுகள் நன்றாக இருக்கும். இது இதய நோய் ஏற்படுவதைக் குறைக்கும்.
  • குறைந்தது நாள் ஒன்றுக்கு அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடலை இயக்கக்கூடிய ஏதேனும் ஒரு பயிற்சியில் ஈடுபடலாம்.
  • வேலை தவிர்த்து உங்களுக்கு பிடித்த ஏதேனும் ஒரு செயலில் ஈடுபடலாம். இது மன அழுத்தத்தைக் குறைக்கும்.
  • தவிர, உணவுகளில் பழங்கள், காய்கறிகளை அதிகம் எடுத்துக்கொள்ளலாம்.