• Fri. Jul 26th, 2024

ரஷியா மீண்டும் மிகப்பெரிய தாக்குதலை நடத்த தயாராகிறது – உக்ரைன்

Apr 5, 2022

உக்ரைன் மீது ரஷியா 41-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர பல நாடுகள் முயற்சித்த போதும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்து வருகின்றன. உக்ரைன் தலைநகர் கீவ், மரியப்போல், கார்கீவ், கார்சன் உள்பட பல்வேறு நகங்களில் ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

ரஷிய படைகளின் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. மேலும், ரஷியாவின் கட்டுப்பாட்டில் இருந்த சில பகுதிகளை உக்ரைன் படைகள் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளன.

இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ராணுவ ஆயுதங்கள், தளவாடங்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது.

இதற்கிடையில், கடந்த சில நாட்களாக உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் ரஷிய படைகள் தாக்குதலை குறைத்துள்ளன. மேலும், ஏற்கனவே கைப்பற்றிய சில பகுதிகளில் இருந்தும் ரஷிய படைகள் பின்வாங்கி வருகின்றன.

இந்நிலையில், நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள நகரங்கள் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்த ரஷியா திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. ரஷியாவின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள கிழக்கு நகரங்களான கார்கீவ், நிப்ரோவ், டொனெட்ஸ்-மகிவ்கா, ஷப்ரிஷிஷியா, மரியுபோல், லுஹன்ஸ், ஹர்லிவ்கா, கமின்ஸ்கி ஆகிய நகரங்கள் மீது ரஷியா மீண்டும் மிகப்பெரிய தாக்குதலை நடத்த தயாராகி வருவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.