• Sat. Apr 20th, 2024

மோசடி செய்தாரா ராஜ்வா்தன் ஹேங்கர்கேகர்?

Feb 19, 2022

19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பையை வென்ற இந்திய ஜூனியா் அணியில் இடம் பெற்றிருந்தவர் ஆல்-ரவுண்டர் ராஜ்வா்தன் ஹேங்கர்கேகர். இந்நிலையில், மும்பையை சேர்ந்த ராஜ்வா்தன் ஹேங்கர்கேகர் வயது மோசடியில் ஈடுபட்டதாக மராட்டிய மாநில விளையாட்டு மற்றும் இளைஞர்துறை ஆணையர் ஓம்பிரகாஷ் பகோரியா குற்றம் சாட்டியுள்ளார்.

ஹேங்கர்கேகர் 8-ம் வகுப்பில் மீண்டும் சேர்ந்த போது பிறந்த தேதியை ஜனவரி 10, 2001-க்கு பதிலாக நவம்பர் 10, 2002 என்று மாற்றியுள்ளார். இந்த வயது குறைப்பால் தான் அவரால் ஜூனியர் உலக கோப்பை போட்டியில் விளையாட முடிந்ததாக புகார் எழுந்துள்ளது.

சர்ச்சையில் சிக்கியுள்ள ஹேங்கர்கேகரை சமீபத்தில் ஐ.பி.எல். ஏலத்தில் ரூ.1½ கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எடுத்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இதேபோன்ற குற்றச்சாட்டில் காஷ்மீரை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரஷீக் சலாம் தர் சிக்கினார். அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவர் 2 வருடம் கிரிக்கெட் விளையாட பிசிசிஐயால் தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ள இளம் வீரர் ராஜ்வா்தன் ஹேங்கர்கேகர் மோசடி செய்தாரா இல்லையா என்பது பிசிசிஐயின் விசாரணைக்கு பின் விரைவில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.