
டி20 இந்திய அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி விலகியுள்ள நிலையில் அவர், பேட்ஸ்மேனாக மட்டுமே தொடர வேண்டும் என்றும், கேப்டன் பொறுப்பை இனி ஏற்க கூடாதென்றும் பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி கூறியுள்ளார்.
டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து இந்திய அணி வெளியேறியுள்ள நிலையில், அடுத்ததாக நியூசிலாந்துக்கு எதிராக நடைபெறும் கிரிக்கெட் தொடருக்கு தயாராகி வருகிறது.
இதில், இந்தியஅணியின் கேப்டனாக ரோகித் சர்மா செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விராட் கோலி, முகமது ஷமி, பும்ரா, ரவிந்திரா ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
உலகின் தலைசிறந்த அணிகளில் ஒன்றான இந்திய அணியின் கேப்டன்ஷிப் மாற்றம் குறித்து, பல்வேறு வீரர்கள் கருத்து கூறி வருகின்றனர். விராட் கோலியின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்தும் அதிகம் பேசப்படுகிறது.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட், விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்டவை குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அப்ரிடி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-
ரோகித் சர்மா மிகச்சிறந்த வீரர் என்பதில் சந்தேகம் கிடையாது. ஐபிஎல் தொடரில் டெக்கன் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடியபோது அவரை நான் அறிவேன். அவர் பார்ப்பதற்கு அமைதியாகத்தான் இருப்பார்.
தேவை ஏற்படும்போது ஆக்ரோஷமாக விளையாடி அணியை வழி நடத்துவார். இத்தகைய பண்பு ஒரு கேப்டனுக்கு மிக அவசியம்.
கேப்டன்ஷிப் மாற்றம் என்பது எல்லா அணிகளிலும் நடைபெறக்கூடியதுதான். என்னைப் பொருத்தளவில், விராட் கோலி ஒட்டுமொத்தமாக கேப்டன் பொறுப்பிலிருந்து விலகி, பேட்டிங்கில் முழு கவனம் செலுத்த வேண்டும்.
தற்போது இருக்கு ஒருநாள், டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பையும் அவர் விட்டு விட வேண்டும். அவர் ஏராளமான மேட்சுகளை விளையாடி விட்டார்.
கேப்டனாக இருந்து கொண்டு பேட்டிங்கிலும் கவனம் செலுத்துவது என்பது சாதாரண வேலை அல்ல.
குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் கேப்டனாக இருப்பது மிக கஷ்டமான வேலை என அவர் கூறியுள்ளார்.