• Fri. Jul 26th, 2024

கடைசி போட்டி சென்னை மைதானத்தில் தான்; தோனி அறிப்பால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்

Oct 6, 2021

இந்திய கிரிக்கெட் அணியை சிறப்பாக வழிநடத்திய முக்கிய கேப்டன்களுள் ஒருவராக முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி வலம் வருகிறார்.

இவர் கடந்த ஆகஸ்டில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இதனால் அதிர்ச்சியுற்ற கிரிக்கெட் ரசிகர்கள் அவர் ஐபிஎல் தொடரில் இருந்தும் ஓய்வு பெற உள்ளாரா? என்பது போன்ற கேள்வியை எழுப்பி வந்தனர்.

இந்நிலையில் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை கைப்பற்றினால் தோனி ஓய்வு பெறுவார் என்று பலர் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 75வது ஆண்டு விழா கொண்டாட்டத்தில் பங்கேற்ற சென்னை அணியின் கேப்டன் தோனி அடுத்தாண்டு ஐபிஎல் தொடரிலும் தான் களமிறங்க உள்ளதை சூசகமாக கூறியுள்ளார்.

நேற்று ஆன்லைன் வாயிலாக நடந்த இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களிடம் கலந்துரையாடிய அவர்,

“என்னுடைய கடைசி போட்டியானது (ஃபேர்வெல்) சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சென்னை மைதானத்தில் ரசிகர்களுக்கு மத்தியில் நடைபெறுவதே எனது விருப்பம். அப்போது ரசிகர்கள் நேரில் வந்து என்னை வழியனுப்ப வேண்டும். நானும் எனது ரசிகர்கள் அனைவரையும் சந்திப்பேன். அந்த வாய்ப்பு எனக்கு கிட்டும் என்றும் என நம்புகிறேன்.” என்று நெகிழ்ந்து பேசியுள்ளார்.

தோனியின் இந்த பதில் மூலம் அவர் ஐ.பி.எல்.லின் மற்றொரு சீசனிலும் விளையாடுவார் என்று தெரிகிறது.

இந்நிலையில் அவரின் இந்த அறிவிப்பால் தோனி ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.