• Fri. Sep 13th, 2024

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் – மட்டக்களப்பில் பலத்த பாதுகாப்பு

Sep 27, 2021

தியாகதீபம் திலீபனின் 34 ஆண்டு நினைவேந்தல் தினத்தையிட்டு மட்டக்களப்பில் சில ஆலயங்கள், தமிழ் அரசியல் கட்சிகளின் காரியாலயங்கள் மற்றும் பிரமுகர்களின் வீடுகளுக்கு முன்பாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

பொலிஸார் மற்றும் அரச புலனாய்வு பிரிவினர் நேற்று (26) ஞாயிற்றுக்கிழமை காலையில் இருந்து பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

1987ஆம் ஆண்டு செட்டெம்பர் மாதம் 15ஆம் திகதி தொடக்கம் 26 ஆம் திகதிவரை உண்ணாவிரம் இருந்து உயிர்நீத்த தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினரான தியாக தீபம் தீலீபனின் 34ஆவது ஆண்டு தினம் கடந்த 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

இதனையடுத்து மட்டக்களப்பு தலைமையக பொலிஸார், கரடியனாறு, காத்தான்குடி, வெல்லாவெளி, வாழைச்சேனை. போன்ற பொலிஸ் நிலையங்களினால் தடையுத்தரவு பெற்றுக்கொள்ளப்பட்டது.

அந்த தடையுத்தரவுகள், முன்னாள், இன்னாள் பாராளுமன்ற கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், மட்டு மாநகரசபை மேயர், தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர். உப்பட தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள பெயர்குறிப்பிட்டு உரியவர்களிடம் வழங்கியுள்ளனர்.

திலீபனின் நினைவேந்தல் தினம் நேற்றாகும். இதன்போது ஆலயங்களிலோ கட்சி காரியாலயங்களிலோ அல்லது தமிழ் அரசியல் வாதிகள் முக்கிய பிரமுகர்கள் வீடுகளிலோ நீதிமன்ற தடை உத்தரவை மீறி விளக்கேற்றி திலீபனின் நினைவேந்தலை செய்ய முற்படுவார்கள் என்ற அச்சம் ஏற்பட்டிருந்தது. இதன்காரணமாகவே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.