• Sat. Jul 27th, 2024

ஒமைக்ரான் பற்றி விளக்கமளிக்கும் தென் ஆப்பிரிக்கா மருத்துவர்

Dec 3, 2021

தென் ஆப்பிரிக்காவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒமைக்ரான் என உலக சுகாதார அமைப்பினால் பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த வைரஸ், உலகமெங்கும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரஸ் 50 உருமாற்றங்களை கொண்டுள்ளதால், அதிவேகமாக பரவக்கூடியதாக இருக்கலாம் என்று மருத்துவ விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இருப்பினும் இதை தொடர் ஆராய்ச்சி மூலம்தான் உறுதி செய்ய முடியும் என்பதால் உலக சுகாதார அமைப்பு மற்றும் பல்வேறு அமைப்புகளின் விஞ்ஞானிகள் இரவு, பகலாக ஆராய்ச்சி நடத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில், தென்னாப்பிரிக்க மருத்துவ சங்கத்தின் தலைவர் ஏஞ்சலிக் கோட்ஸி கூறியதாவது:-

தற்போதைக்கு, தடுப்பூசிகள் இந்த காலகட்டத்தில் உங்களை நோயிலிருந்து பாதுகாக்கும் என்பதை நாங்கள் அறிவோம், ஏனெனில் இளம் வயது மற்றும் இணை நோய்கள் உள்ளவர்கள் யாராக இருந்தாலும், தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு லேசான அறிகுறிகள் தான் உள்ளது.

இது ஆரம்ப கட்ட நிலையில் உள்ள டெல்டா மாறுபாட்டை விட பாதிப்பு குறைவாகத் தான் உள்ளது. ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளோம். இனி வரும் காலங்களில் இதன் வீரீயம் பற்றி தெரிய வரும். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாகத்தான் உள்ளது.

ஒமைக்ரான் (அறிகுறிகள்) பெரும்பாலும் உடல் நிலை சோர்வாக இருக்கும். அது உடல்வலி மற்றும் வலியாக இருக்கும். பாதிக்கப்பட்ட நபருக்கு கடுமையான தலைவலி மற்றும் சோர்வு காணப்படும். வாசனையின்மை/சுவை இழப்பு, அல்லது கடுமையான காய்ச்சல் பற்றி யாரும் குறிப்பிடவில்லை. ஒமைக்ரான் பற்றி பயம் கொள்ள தேவையில்லை என்றார்.