• Fri. Jul 26th, 2024

சிவபெருமானை அவமதித்த இன்ஸ்டாகிராம் – வெடித்த சர்ச்சை!

Jun 9, 2021

ஒரு கையில் மதுபானம், மற்றோரு கையில் மொபைல் போனுடன் சிவ பெருமான் அமர்ந்திருப்பது போன்று ஒரு ஸ்டிக்கரை வெளியிட்டுள்ளதால், இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் மீது பா.ஜ.க தலைவர் ஒருவர் பொலிஸில் புகார் அளித்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் இருக்கும் இந்த ஸ்டிக்கர், கடவுள் சிவனை வேண்டுமென்றே தவறாக சித்தரித்து காட்டியுள்ளதாக புது டில்லியில் பாராளுமன்ற தெரு காவல் நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் மனிஷ் சிங் புகார் அளித்துள்ளார்.

அவரது புகாரில் இன்ஸ்டாகிராம் சி.இ.ஓ மற்றும் அந்நிறுவனத்தின் சில அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பிரிவில் காணப்படும் இந்த ஸ்டிக்கரில், சிவன் தனது வலது கையில் ஒயின் கிளாஸையும், தனது இடது கையில் மொபைல் போனையும், தலையில் பூம் ஹெட்போனையும் மாட்டிக்கொண்டு அமர்ந்திருப்பது போல் உருவாக்கப்பட்டுள்ளது.

இது இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக மனிஷ் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட ஒரு வீடியோவில், இந்த ஸ்டிக்கர்கள் உடனடியாக அகற்றப்படாவிட்டால், இன்ஸ்டாகிராம் நிறுவனத்துக்கு எதிராக போராட்டம் தொடங்கப்படும் என மனீஷ் சிங் கூறுயுள்ளார். மேலும், இன்ஸ்டாகிராம் நிறுவனம் இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.