• Sat. Jul 20th, 2024

4 வயது குழந்தையை மது அருந்த வைத்து காணொளி!

Jun 11, 2021

குழந்தை ஒன்று பியர் ரின்னில் இருந்து பியர் அருந்தும் காணொளி சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து 25 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

காணொளி காட்சிகள் குறித்து காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கிய நிலையில் , சந்தேக நபரை பேலியகொட பொலிசார் கண்டுபிடித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண கூறினார்.

பேலியகொட நுகே வீதியில் இடம்பெற்ற இச்சம்பவத் தில் 4 வயது குழந்தைக்கு பியர் ரின்னிலிருந்து பியரை அருந்த அனுமதித்தமைக்காக அந்நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவித்த பொலிஸார், குழந்தையை கொழும்பு ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதித்து குழந்தையின் மனநிலை குறித்து அறிக்கை ஒன்றை பெற்றுக் கொள்ள எதிர்ப்பார்த்துள்ளதாக நீதிமன்றில் தெரிவித்தனர்.

குறித்த அறிக்கை கிடைத்த பின்னர் குழந்தை ஏதாவது விதத்தில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகி உள்ளதா என்பது தொடர்பில் அறிந்துக் கொள்ள கூடியதாக இருக்கும் என பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து முறைப்பாடை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி அழைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.