• Sat. Jul 27th, 2024

ராஜபக்ஷ குடும்பத்தின் நிறுவனமாக மாறும் இலங்கை அரசு

Jul 13, 2021

இலங்கையின் தற்போதைய அரசாங்கம் ராஜபக்ஷ குடும்பத்தின் நிறுவனமாக மாறி வருவதாக நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

இலங்கையில் ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ஷவின் மூன்று சகோதரர்கள் அரசாங்கத்தில் உயர் பதவிகளை வகித்து வருவதாகவும் அவர்களின் புதல்வர்களுக்கும் அதிகாரமிக்க பதவிகள் வழங்கப்பட்டுள்ளன எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இலங்கையின் நிதியமைச்சராக பசில் ராஜபக்ஷ பதவியேற்றுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை இது, குடும்ப ஆட்சியை உறுதிப்படுத்தும் நடவடிக்கை எனவும் கூறியுள்ளது.

கோட்டாபய ராஜபக்ஷ இலங்கையின் ஜனாதிபதியாக பதவி வகிப்பதுடன் அவரது சகோதரரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவி வகித்து வருகிறார். மேலும் மற்றுமொரு சகோதரரான சமல் ராஜபக்ஷ மற்றும் மகிந்த ராஜபக்ஷவின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் அமைச்சர்களாக பதவி வகித்து வருகின்றனர்.

சமல் ராஜபக்ஷவின் புதல்வர் ஷசீந்திர ராஜபக்ஷ ராஜாங்க அமைச்சராக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில், அண்மையில் அமெரிக்காவில் இருந்து திரும்பிய பசில் ராஜபக்ஷ, நாட்டின் மிக முக்கிய அமைச்சு பதவிகளில் ஒன்றான நிதியமைச்சு பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

இவர்களை தவிர ராஜபக்ஷ சகோதரர்களில் தங்கையின் புதல்வரான நிபுண ரணவக்க நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.

இலங்கையின் அரசத்துறையில் உள்ள நிறுவனங்களின் கிட்டத்தட்ட 80 வீதமான நிறுவனங்கள் ராஜபக்ஷ குடும்பத்தினரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதாக நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.