• Wed. Jul 24th, 2024

பேருந்துகளை மட்டுமல்ல பழைய ரயில் பெட்டிகளையும் கடலில் இறக்க தயார் – டக்ளஸ்

Jun 17, 2021

நாட்டின் மீன்வள பெருக்கத்திற்காக பழைய பேருந்துகளை மட்டுமல்ல தேவையாயின் பழைய ரயில் பெட்டிகளையும் கடலில் இறக்க தயாராக இருக்கிறேன். என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியிருக்கின்றார்.

நேற்று(16) மாலை ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில்,

”கடலினுள் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக பழைய இரும்புகளை கடலினுள் போடும் நடவடிக்கையினை நாம் மட்டும் செய்யவில்லை. ஐரோப்பிய நாடுகள் உட்பட சுமார் 40 க்கு மேற்பட்ட நாடுகள் கடல் வாழ் உயிரினங்களின் வளர்ச்சிக்காக பழைய பேருந்துகள் மாற்றம் பழைய கார்களை கடலில் இடுவது வழமையாக உள்ளது.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் பழைய பேருந்துகளை இறக்கியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கண்டன போராட்டங்களை செய்திருந்தார்கள்.

ஆனால் பழைய இரும்புகளை கடலினுள் இறக்கி மீன் இனப்பெருக்கத்தை மேற்கொள்ளும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக விளங்குகிறது.

நாம் புத்திஜீவிகள் மற்றும் துறைசார் வல்லுனர்களின் கருத்துக்களைப் பின்பற்றி செயர்க்கை முறையிலான மீன் இனப்பெருக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பழைய பேருந்துகளை கடலினுள் செலுத்தினோம்.

ஆகவே மீன் இனங்களின் வளர்ச்சிக்காக பழைய பேருந்துகளை மட்டுமல்ல இலங்கையிலுள்ள பயன்படுத்த முடியாத ரயில் பெட்டிகளையும் கடலினுள் செலுத்துவதற்கு தயாராக இருக்கிறேன்” என அவர் மேலும் தெரிவித்தார்.