• Tue. Apr 16th, 2024

வரலாற்றில் இன்று மார்ச் 21

Mar 21, 2022

மார்ச் 21 கிரிகோரியன் ஆண்டின் 80 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 81 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 285 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

630 – உரோமைப் பேரரசர் எராக்கிளியசு கிறித்தவப் புனிதச் சின்னமான உண்மையான சிலுவையை எருசலேமிற்கு மீளக் கையளித்தார்.

1152 – பிரெஞ்சு மன்னர் ஏழாம் லூயி, அரசி எலனோர் ஆகியோரின் திருமணம் செல்லாமல் ஆக்கப்பட்டது.

1188 – அண்டோக்கு யப்பான் பேரரசராகப் பதவியேற்றார்.

1556 – கண்டர்பரி பேராயர் தாமஸ் கிரான்மர் ஆக்சுபோர்டு நகரில் எரியூட்டிக் கொல்லப்பட்டார்.

1788 – அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் நியூ ஓர்லென்ஸ் நகரில் நிகழ்ந்த பெரும் தீயினால் நகரின் பெரும் பகுதி அழிந்தது.

1800 – உரோம் நகரில் இடம்பெற்ற கலகங்களை அடுத்து கத்தோலிக்கத் திருச்சபைத் தலைவர்கள் நகரை விட்டு விரட்டப்பட்டதை அடுத்து, வெனிசு நகரில் ஏழாம் பயசு திருத்தந்தையாகப் பதவியேற்றார்.

1801 – பிரித்தானியா மற்றும் பிரெஞ்சுப் படைகளுக்கிடையில் எகிப்தின் அலெக்சாந்திரியா நகரில் போர் இடம்பெற்றது.

1844 – பகாய் நாள்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் படி இந்நாள் முதலாம் ஆண்டு முதலாம் நாள் ஆகும். ஆண்டுதோறும் இந்நாள் பகாய் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது.

1871 – ஒட்டோ ஃபொன் பிஸ்மார்க் செருமானியப் பேரரசின் முதலாவது அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1913 – அமெரிக்காவின் ஒகைய்யோவில் டேட்டன் என்ற இடத்தில் இடம்பெற்ற பெரும் வெள்ளம் காரணமாக 360 பேர் உயிரிழந்தனர், 20,000 வீடுகள் அழிந்தன.

1917 – டானிசு மேற்கிந்தியத் தீவுகள் கன்னித் தீவுகள் எனப் பெயர் மாற்றம் பெற்றது.

1919 – அங்கேரிய சோவியத் குடியரசு நிறுவப்பட்டது. உருசியாவில் நிகழ்ந்த அக்டோபர் புரட்சிக்குப் பின்னர் ஐரோப்பாவில் உருவான முதலாவது பொதுவுடைமை அரசு இதுவாகும்.

1921 – கம்யூனிசப் போரினால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை ஈடு செய்ய புதிய பொருளாதாரக் கொள்கையை போல்செவிக் கட்சி நடைமுறைப்படுத்தியது.

1925 – அமெரிக்காவின் டென்னிசி மாநிலத்தில் மனிதக் கூர்ப்பு பற்றிய கல்வி தடை செய்யப்பட்டது.

1935 – பாரசீக நாட்டை ஈரான் (ஆரியரின் நாடு) என அழைக்கும்படி அதன் தலைவர் ரெசா ஷா வெளிநாடுகளுக்கு அழைப்பு விடுத்தார்.

1937 – புவேர்ட்டோ ரிக்கோவில் பொன்சு நகரில் அமெரிக்க ஆளுநரின் உத்தரவின் கீழ் காவல்துறையினர் சுட்டதில் 19 பேர் கொல்லப்பட்டனர்.

1945 – இரண்டாம் உலகப் போர்: பர்மாவின் மண்டலை நகரை பிரித்தானியப் படையினர் விடுவித்தனர்.

1945 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய விமானங்கள் தென்மார்க்கின் கோபனாவன் நகரில் பாடசாலை ஒன்றின் மீது குண்டுகளை வீசியதில் 125 பேர் கொல்லப்பட்டனர்.

1948 – முகமது அலி ஜின்னா உருது மட்டுமே பாக்கித்தானின் அரசு மொழியாக இருக்கும் என டாக்காவில் வைத்து அறிவித்தார்.

1960 – தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல்: தென்னாபிரிக்காவில் சார்ப்வில் என்ற இடத்தில் கறுப்பின தென்னாபிரிக்க ஆர்ப்பாட்டக்காரரை நோக்கி காவற்படையினர் சுட்டதில் 69 பேர் கொல்லப்பட்டனர்.

1965 – நாசா ரேஞ்சர் 9 என்ற சந்திரனுக்கான தனது ஆளில்லா விண்ணுளவியை ஏவியது.

1970 – முதலாவது பூமி நாளுக்கான அழைப்பை சான் பிரான்சிஸ்கோ நகர முதல்வர் யோசப் அலியோட்டோ விடுத்தார்.

1980 – ஆப்கானித்தானில் சோவியத் ஆக்கிரமிப்பை எதிர்த்து மாஸ்கோவில் 1980 ஒலிம்பிக் விளையாட்டுகளைப் பகிஷ்கரிப்பதாக ஐக்கிய அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் அறிவித்தார்.

1984 – மணலாறு பிரதேசத்தைத் தடைவலயமாக்கி இலங்கை அரசு அங்கு வாழ்ந்து வந்த தமிழர்களை அடித்து விரட்டினர்.

1990 – 75 ஆண்டுகால தென்னாபிரிக்க ஆட்சியிலிருந்து நமீபியா விடுதலை பெற்றது.

1999 – பெர்ட்ராண்ட் பிக்கார்டு பிறையன் யோன்சு ஆகியோர் வெப்ப வாயுக் கூண்டில் உலகை வலம் வந்து சாதனை படைத்தனர்.

2000 – திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் இசுரேலுக்கான தனது முதலாவது இறைப்பயணத்தை மேற்கொண்டார்.

2006 – டுவிட்டர் சமூக ஊடகம் உருவாக்கப்பட்டது.