• Wed. Oct 23rd, 2024

கலப்பட போதைப்பொருளால் 17 பேர் பலி!

Feb 3, 2022

அர்ஜென்டினாவின் எட்டு மாகாணங்களில் கலப்படம் செய்யப்பட்ட கோகைன்(cocaine) என்ற போதைப்பொருளை பயன்படுத்திய 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 56-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஹர்லிங்காம், சான் மார்ட்டின் மற்றும் டிரெஸ் டி பெப்ரரோ நகரங்களில் இறப்பு எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலப்படம் செய்யப்பட்ட கோகைனை பயன்படுத்தியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல் நபர் உயிரிழந்ததும் போலீசார் போதைப்பொருள் விற்பனை செய்ததாக சந்தேகித்த ஒரு கும்பலை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிற போதைப்பொருள் கும்பல்களுடனான போட்டியில் செலவைக் குறைக்கும் நோக்கில் கோகைனில் சில பொருட்களை கலந்திருக்கலாம் அது நச்சுத்தன்மை கொண்டதாக மாறியிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

கோகைனில் கலக்கப்பட்ட பொருள் என்னவென்று தெரியாததால் ஆய்வக முடிவுக்காக காத்திருப்பதாகவும் இறப்புகளைத் தடுக்க அவசர சேவைகள் மற்றும் மருத்துவமனைகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் சமீபத்தில் வாங்கிய எந்த போதைப்பொருள்களையும் பயன்படுத்த வேண்டாமென்று அர்ஜென்டினா அறிவுறுத்தி உள்ளது.