• Sun. Jul 21st, 2024

பாகிஸ்தானில் தொடரும் அட்டூழியம்; பாட்டு சத்தம் அதிகமென கூறிய கிறிஸ்தவ வாலிபர் படுகொலை!

Feb 15, 2022

பாகிஸ்தானில் பாட்டு சத்தம் அதிகமென கூறிய கிறிஸ்தவ வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ளது ஜங்கல் டேரா கிராமம். இங்கு வசித்து வந்தவர் முஸ்டாக் அகமது (வயது 41). இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர்.

குரான் நூலின் பக்கங்களை கிழித்து, தீ வைத்து இவர் எரித்து விட்டதாக கூறி, அந்த பகுதியில் உள்ள மக்கள் கும்பலாக ஒன்று சேர்ந்து அகமதுவை தரதரவென இழுத்து சென்று மரத்தில் கட்டி வைத்து உள்ளனர். பின்னர் மொத்த பேரும் கல்லாலேயே அவரை தாக்கி உள்ளனர்.

இதில் அகமது அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவரை படுகொலை செய்ததோடு, அவரின் உடலையும் மரத்தில் கட்டி தொங்க விட்டுள்ளனர். இந்த சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாகாணத்தில் லாகூர் நகரில் வால்டன் என்ற பகுதியில், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் கிறிஸ்தவ வாலிபர் ஒருவர் கொல்லப்பட்டு உள்ளார்.

அந்த பகுதியை சேர்ந்த கிறிஸ்தவரான பர்வேஸ் மசீ (வயது 25) என்பவர், தனது அண்டை வீட்டாரான சோனி மாலிக் என்பவரிடம் இசையின் சப்தம் அதிகம் இருக்கிறது. அதனால், ஒலியை சற்று குறைக்கும்படி கேட்டு கொண்டுள்ளார்.

இதில் ஏற்பட்ட மோதலில், கடந்த ஞாயிற்று கிழமை மாலையில், மாலிக் மற்றும் அவருடன் சேர்ந்த கும்பல், பர்வேசின் உறவினரான சோபல் மசீ என்பவரை தாக்கியுள்ளனர். இதில் அவர் காயமடைந்து உள்ளார்.

இந்த நிலையில், மாலிக் மற்றும் சிலர் அடங்கிய கும்பல் பர்வேசை செங்கற்கள் மற்றும் ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் சம்பவ பகுதியிலேயே பர்வேஸ் உயிரிழந்து உள்ளார்.

இதனை தொடர்ந்து, அந்த பகுதியில் கிறிஸ்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யும்படி வலியுறுத்தினர்.

இந்த சம்பவத்தில் 200 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 3 பேர் கைது செய்யப்பட்டனர். இரு தரப்பினருக்கு இடையே மீண்டும் மோதல்கள் ஏற்படாமல் இருக்க பொலிசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இதேவேளை பாகிஸ்தானில் மத நிந்தனை செய்ததாக கடந்த டிசம்பரில் இலங்கையர் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் உலகளவில் பெரும் அதிவலைகளை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.