• Tue. Mar 26th, 2024

மண வாழ்க்கையில் இருந்து பிரிகிறோம்; சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல ஜோடி!

Oct 2, 2021

தென்னிந்திய சினிமாவின் பிரபல சினிமா தம்பதியரான நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சமந்தா தொடர்பில் வெளியான சர்ச்சைகளுக்கு இருவரும் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

அதன்படி இருவரும் மணவாழ்க்கையில் இருந்து விடுபடுவதாக கூறியுள்ளனர். இதனை நடிகர் சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நீண்ட நாட்களாக இவர்களது விவாகரத்து குறித்த செய்தி கசிந்து வந்த நிலையில் தற்போது அதை சமந்தா உறுதி செய்துள்ளார்.

“நீண்ட ஆலோசனைக்கு பிறகு நானும், நாக சைதன்யாவும் கலந்து பேசி திருமண வாழ்க்கையில் இருந்து பிரிந்து அவரவர் வழியில் செல்ல முடிவு செய்துள்ளோம். எங்களை உறவு முறையில் நெருங்க செய்தது எங்களது பத்து ஆண்டு கால நட்பு தான். அது தான் எங்களுக்குள் பிணைப்பை ஏற்படுத்தியது.

ரசிகர்கள், நலன் விரும்பிகள் மற்றும் மீடியா நண்பர்கள் இந்த இக்கட்டான நிலையில் ஆதரவு கொடுக்க வேண்டும். அதே நேரத்தில் எங்களுக்கு கொடுக்கப்படும் பிரைவசி மூலமாக வாழ்வில் அடுத்த கட்டம் நோக்கி நகர்கிறோம். உங்களது ஆதரவுக்கு நன்றி!” என தெரிவித்துள்ளார்.

நடிகை சமந்தா 2010-ஆம் ஆண்டில் வெளியான ‘ஏ மாய சேசாவே’ என்ற தெலுங்கு படம் மூலம் திரையுலகில் என்ட்ரி கொடுத்திருந்தார். இந்த படத்தில் நாக சைதன்யா ஹீரோவாக நடித்திருந்தார்.

தொடர்ந்து இருவரும் மனம், ஆட்டோ நகர் சூர்யா, மஜிலி மாதிரியான தெலுங்கு படங்களில் இணைந்து நடித்துள்ளனர். கடந்த 2017-இல் திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது அவர்களின் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.