• Fri. Apr 19th, 2024

ஒமைக்ரான் வகை கொரோனா – தடுப்பூசிகள் குறித்த ரஷ்யாவின் அறிவிப்பு

Dec 1, 2021

உலகில் தற்போது பரவி வரும் ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸை ஸ்புட்னிக் வி மற்றும் ஸ்புட்னிக் லைட் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் எதிர்க்கும் திறன் கொண்டிருக்கும் என்று சுகாதாரத் துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸான ஒமைக்ரான் வைரஸ், இப்போது உலகின் 15-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.

இதனால், இந்த புதிய வகை கொரோனா பரவலைத் தடுக்க அந்தந்த நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த வைரஸை தற்போது மக்களுக்கு போட்டு வரும் தடுப்பூசிகள் கட்டுப்படுத்துமா என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. அதே சமயம் சில தடுப்பூசி நிறுவனங்கள் இந்த விஷயத்தை கையை விரித்துவிட்டன.

இது போன்ற நிலையில் தான், ரஷ்யாவின் sputnik V மற்றும் sputnik light ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸை எதிர்க்கும் திறன் கொண்டிருக்கும் என்று ரஷ்ய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மேலும், புதிய ஒமைக்ரான் வகை கரோனா வைரஸை எதிர்த்துப் போரிடக்கூடிய பூஸ்டர்களைத் தயாரிக்க தயாராக உள்ளதாகவும் ரஷ்யா கூறியுள்ளது.

ரஷியாவின் நேரடி முதலீட்டு நிதியத்தின் தலைமைச் செயல் அதிகாரி டிமிட்ரிவ் இது குறித்து கூறுகையில், கொரோனாவின் உருமாற்றத்திற்கேற்ப sputnik V மற்றும் sputnik light ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் தற்போது பயன்பாட்டில் உள்ளன.

ஸ்புட்னிக் தடுப்பூசி தயாரிக்கும் கமலேயா நிறுவனம், கொரோனா வைரஸ் மாறுபாட்டிற்கு ஏற்ப தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. தற்போது ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸுக்கு எதிரான புதிய ஸ்புட்னிக் தடுப்பூசியை உருவாக்கும் பணியைத் தொடங்கியுள்ளது.

ஸ்புட்னிக் தடுப்பூசியில் பெரிதாக மாற்றம் தேவைப்படாத நிலையில், 45 நாள்களில் ஒமைக்ரானுக்கு எதிராக பெருமளவில் தடுப்பூசியை உருவாக்க முடியும். மாற்றம் தேவைப்பட்டால், பிப்ரவரி 20, 2022-க்குள் ஸ்புட்னிக் பூஸ்டர்களை வழங்குவோம் என்று தெரிவித்துள்ளார்.