• Fri. Oct 18th, 2024

வரலாற்றில் இன்று பெப்ரவரி 04

Feb 4, 2022

பெப்ரவரி 4 கிரிகோரியன் ஆண்டின் 35 ஆம் நாளாகும்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 330 (நெட்டாண்டுகளில் 331) நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

211 – உரோமைப் பேரரசர் செப்டிமசு செவெரசு இறந்தார். தமக்கிடையே சண்டை பிடிக்கும் அவரது இரண்டு மகன்களின் கட்டுப்பாட்டில் பேரரசு வந்தது.

960 – சீனாவில் சொங் ஆட்சி ஆரம்பமானது. இவ்வாட்சி அடுத்த மூன்று நூற்றாண்டுகளுக்கு நீடித்தது.

1169 – சிசிலியை நிலநடுக்கம் தாக்கியதில் பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தோ அல்லது இறந்தோ போயினர்.

1488 – பார்த்தலோமியோ டயஸ் தென்னாப்பிரிக்காவுக்கும் இந்தியப் பெருங்கடலுக்கும் முதலாவது ஐரோப்பியக் கடற்பயணத்தை ஆரம்பித்தார்.

1555 – ஜான் ரொஜர்சு தீயிட்டுக் கொல்லப்பட்டார். இவரே இங்கிலாந்தின் முதலாம் மேரியின் கீழ் முதலாவது சீர்திருத்தத் திருச்சபை ஆங்கிலேயத் தியாகியானவர்.

1703 – தோக்கியோவில் 46 சாமுராய்கள் தமது தலைவரின் இறப்பை ஈடு செய்யும் பொருட்டு சடங்குத் தற்கொலை செய்து கொண்டனர்.

1783 – ஐக்கிய அமெரிக்கா மீது தனது அனைத்துத் தாக்குதல்களையும் நிறுத்துவதாக ஐக்கிய இராச்சியம் அறிவித்தது.

1789 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது அரசுத்தலைவராக ஜார்ஜ் வாஷிங்டன் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.

1794 – முதல் பிரெஞ்சுக் குடியரசு முழுவதும் அடிமை முறை ஒழிக்கப்பட்டது. ஆனாலும் 1802 இல் பிரெஞ்சு மேற்கிந்தியத் தீவுகளில் aடிமை முறை மீண்டும் கொண்டுவரப்பட்டது.

1797 – எக்குவதோரில் நில நடுக்கம் ஏற்பட்டதில் 40,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.

1810 – கரிபியன் தீவுகளான குவாதலூப்பு பிரித்தானிய அரச கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

1834 – இலங்கையின் ஆங்கிலப் பத்திரிகை சிலோன் ஒப்சேர்வர் முதன் முதலாக கொழும்பு ஒப்சேர்வர் என்ற பெயரில் வெளியிடப்பட்டது.

1859 – கிரேக்க பைபிளின் 4ம் நூற்றாண்டுக் கையெழுத்துப்படி ஒன்று எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: மான்ட்கமரியில், பிரிந்து சென்ற ஆறு அமெரிக்க மாநிலங்கள் இணைந்து அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பை உருவாக்கின.

1899 – பிலிப்பைன்-அமெரிக்கப் போர் மணிலா சமருடன் ஆரம்பமாகியது.

1932 – இரண்டாம் சீன-சப்பானியப் போர்: கார்பின், மஞ்சூரியா, சப்பானிடம் வீழ்ந்தன.

1936 – முதற்தடவையாக ரேடியம் E என்ற செயற்கைக் கதிரியக்கத் தனிமம் உருவாக்கப்பட்டது.

1938 – இட்லர் தன்னை செருமனியின் இராணுவ உயர் தளபதியாக அறிவித்தார்.

1943 – இரண்டாம் உலகப் போர்: ஸ்டாலின்கிராட் போர் முடிவுக்கு வந்தது.

1945 – இரண்டாம் உலகப் போர்: “மூன்று பெரும் தலைவர்கள்” (சர்ச்சில், ரூசவெல்ட், ஸ்டாலின்) உக்ரேனில் கிரிமியாவில் நடந்த யால்ட்டா மாநாட்டில் சந்தித்தனர்.

1948 – இலங்கை பிரித்தானியப் பொதுநலவாயத்தின் கீழ் இலங்கை மேலாட்சி என்ற பெயரில் விடுதலை அடைந்தது.

1957 – இலங்கை விடுதலை நாளை திருகோணமலையில் துக்க நாளாக அனுட்டித்த தமிழ் மக்கள் மீது காவல்துறையினர் சுட்டதில் திருமலை நடராசன் என்ற இளைஞர் கொல்லப்பட்டார். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

1961 – அங்கோலா விடுதலைப் போர் ஆரம்பமானது.

1966 – நிப்போன் ஏர்வேய்சு விமானம் டோக்கியோ வளைகுடாவில் வீழ்ந்ததில் 133 பேர் உயிரிழந்தனர்.

1969 – பாலத்தீன விடுதலை இயக்கத் தலைவராக யாசர் அரபாத் பதவியேற்றார்.

1974 – ஐரியக் குடியரசுப் படை போராளிகள் இங்கிலாந்து யோர்க்சயர் நகரில் இராணுவத்தினரை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றைக் குண்டு வைத்துத் தகர்த்ததில் ஒன்பது இராணுவத்தினரும் 3 பொது மக்களும் கொல்லப்பட்டனர்.

1975 – சீனாவில் 7.3 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 2,041 பேர் உயிரிழந்தனர்.

1976 – குவாத்தமாலா மற்றும் ஒண்டுராசு நிலநடுக்கத்தில் 22,000 பேர் இறந்தனர்.

1977 – சிகாகோவில் தொடருந்து ஒன்று தடம்புரண்டதில் 11 பேர் உயிரிழந்தனர், 180 பேர் காயமடைந்தனர்.

1978 – இலங்கையின் முதலாவது நிறைவேற்று அரசுத்தலைவராக ஜே. ஆர். ஜெயவர்த்தனா பதவியேற்றார்.

1992 – ஊகோ சாவெசு தலைமையில் வெனிசுவேலாவில் அரசுத்தலைவர் கார்லோசு பேரெசுக்கு எதிராக ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

1997 – இசுரேலில் இரண்டு உலங்குவானூர்திகள் வானில் மோதியதில் 73 பேர் உயிரிழந்தனர்.

1998 – ஆப்கானித்தானில் இடம்பெற்ற 5.9 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 2,323 பேர் உயிரிழந்தனர்.

2003 – யுகோசுலாவியா அதிகாரபூர்வமாக செர்பியாவும் மொண்டெனேகுரோவும் எனப் பெயர் மாற்றம் பெற்றது.

2004 – மார்க் சக்கர்பெர்க் முகநூல் என்ற சமூக வலைத்தளத்தை ஆரம்பித்தார்.

2007 – ஒலியை மிஞ்சிய வேகத்தில் செல்லும் உருசிய-இந்திய “பிரமாசு” ஏவுகணை ஒரிசா ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது.

2007 – வங்காள தேசத்தில் இடம்பெற்ற உலகின் மிகப் பெரிய கூட்டுப் பிரார்த்தனையில் 3 மில்லியனுக்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.

2015 – டிரான்சுஆசியா ஏர்வேசு விமானம் தாய்வான் தலைநகர் தாய்பெய்யில் கீலுங் ஆற்றில் விழுந்ததில் 43 பேர் உயிரிழந்தனர்.