• Wed. Apr 17th, 2024

வரலாற்றில் இன்று டிசம்பர் 2

Dec 2, 2021

டிசம்பர் 2 கிரிகோரியன் ஆண்டின் 336 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 337 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 29 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

1409 – லீப்சிக் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.

1697 – இலண்டனில் புனித பவுல் பேராலயம் திறக்கப்பட்டது.

1804 – நோட்ரே டேம் டி பாரிசில் நெப்போலியன் பொனபார்ட் பிரான்சின் பேரரசனாகத் தனக்குத்தானே முடிசூடினான்.

1805 – நெப்போலியனின் தலைமையில் பிரான்சியப் படையினர் ஓஸ்டர்லிட்ஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் உருசிய-ஆத்திரியக் கூட்டுப் படைகளைத் தோற்கடித்தனர்.

1823 – அமெரிக்க அரசுத்தலைவர் ஜேம்ஸ் மன்ரோ ஐரோப்பிய சர்ச்சைகளில் அமெரிக்கா நடுநிலைமை வகிக்கும் என அறிவித்தார், அதேவேளையில் ஐரோப்பிய அரசுகள் அமெரிக்காக்களில் தலையிடக்கூடாது எனவும் எச்சரித்தார்.

1843 – யாழ்ப்பாணத்தில் கடும் சூறாவளி வீசியதில் பலத்த அழிவுகள் ஏற்பட்டன.[1]

1848 – முதலாம் பிரான்சு யோசப்பு ஆத்திரியாவின் பேரரசராக முடிசூடினார்.

1851 – புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரெஞ்சு அரசுத்தலைவர் லூயி-நெப்போலியன் பொனபார்ட் பிரான்சின் இரண்டாம் குடியரசைக் கலைத்தார்.

1852 – மூன்றாம் நெப்போலியன் பிரான்சின் பேரரசராக முடிசூடினார்.

1859 – அடிமை ஒழிப்பு செயற்பாட்டாளரும் போராளியுமான ஜான் பிரவுன் மேற்கு வர்ஜீனியாவில் அக்டோபர் 16 இல் நடத்திய முற்றுகைக்காக தூக்கிலிடப்பட்டார்.

1908 – பூயி தனது இரண்டாவது அகவையில் சீனாவின் பேரரசனாக முடிசூடினான்.

1942 – மன்காட்டன் திட்டம்: என்ரிக்கோ பெர்மி தலைமையிலான குழு செயற்கையாகத் தானே தொடருமாறு நிகழும் அணுக்கரு தொடர்வினையை ஆரம்பித்தது.

1943 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலியின் பாரி துறைமுகத்தில் இடம்பெற்ற வான்தாக்குதலில் அமெரிக்கக் கப்பல் ஒன்று உட்படப் பல கப்பல்கள் மூழ்கின.

1946 – பிரித்தானிய அரசாங்கம் நேரு, பால்தேவ் சிங், ஜின்னா, லியாகத் அலி கான் ஆகிய தலைவர்களை இந்தியாவின் சட்ட சபையைப் பிரதிநிதித்துவப்படுத்த அழைத்தது.

1947 – பாலத்தீனத்தை இரண்டாகப் பிரிக்க ஐநா திட்டம் அறிவிக்கப்பட்டதை அடுத்து எருசலேமில் கலவரம் மூண்டது.

1950 – கொரியப் போர்: வட கொரியாவிலிருந்து ஐநா படையினர் முற்றாக விலக்கப்பட்டனர்.

1954 – சீனக் குடியரசுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் பாதுகாப்பு உடன்பாடு வாசிங்டனில் கையெழுத்திடப்பட்டது.

1956 – பிடல் காஸ்ட்ரோ, சே குவேரா மற்றும் ஆதரவாளர்களும் கியூபா புரட்சியை முன்னெடுப்பதற்காக கிரான்மா என்ற படகில் கியூபாவை சென்றடைந்தனர்.

1961 – பிடெல் காஸ்ட்ரோ தன்னை ஒரு மார்க்சிச-லெனினிசவாதி எனவும் கியூபா கம்யூனிச நாடாக இருக்கும் எனவும் அறிவித்தார்.

1970 – ஐக்கிய அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் ஆரம்பமானது.

1971 – சோவியத்தின் செவ்வாயை நோக்கி ஏவப்பட்ட மார்ஸ் 2 விண்கலம் தரையிறங்கி ஒன்றை அங்கு இறக்கியது. இது வெற்றிகரமாகத் தரையிறங்கினாலும், தொடர்புகளை இழந்தது. செவ்வாயில் மெதுவாகத் தரையிறங்கிய முதலாவது விண்கலம் இதுவாகும்.

1971 – அபுதாபி, அஜ்மான், புஜைரா, சார்ஜா, துபாய், உம் அல்-குவைன் ஆகிய நாடுகள் ஐக்கிய அரபு அமீரகம் என்ற பெயரில் இணைந்தன.

1975 – பத்தே லாவோ என்பவர் லாவோசின் தலைநகர் வியஞ்சானைக் கைப்பற்றி, லாவோ மக்கள் சனநாயகக் குடியரசை அமைத்தார்.

1976 – பிடல் காஸ்ட்ரோ கியூபாவின் அரசுத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.

1980 – எல் சல்வடோரில் நான்கு அமெரிக்கக் மதப்பரப்புனர்கள் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டு சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

1982 – யூட்டா பல்கலைக்கழகத்தில் உலகின் முதலாவது செயற்கை இதயம் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது.

1984 – ஒதியமலைப் படுகொலைகள்: முல்லைத்தீவு மாவட்டம், ஒதியமலை கிராமத்தில் இலங்கை இராணுவத்தினரால் 32 தமிழ் மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1988 – பெனசீர் பூட்டோ பாகித்தானின் முதல் பெண் பிரதமரானார்.

1989 – மலேசிய – தாய்லாந்து அரசுகளுக்கும் மலாயக் கம்யூனிஸ்டுக் கட்சிக்கும் இடையில் இடம்பெற்ற அமைதி ஒப்பந்தத்தை அடுத்து மலேசியக் கம்யூனிசக் கிளர்ச்சி முடிவுக்கு வந்தது.

1990 – ஒன்றுபட்ட செருமனியில் 1932 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இடம்பெற்ற முதலாவது பொதுத்தேர்தலில் எல்முத் கோல் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது.

1991 – சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலை பெற்ற உக்ரைனை கனடாவும் போலந்தும் முதல் நாடுகளாக அங்கீகரித்தன.

1993 – கொலம்பியாவின் போதைப்பொருள் கடத்தல் தலைவன் பப்லோ எசுகோபர் மெதெயின் நகரில் சுட்டுக் கொல்லப்பட்டான்.

1993 – ஹபிள் விண்வெளித் தொலைநோக்கியைத் திருத்தும் நோக்கோடு நாசாவின் எண்டெவர் விண்ணோடம் விண்ணுக்கு ஏவப்பட்டது.

1995 – யாழ்ப்பாணக் குடாநாடு இலங்கை இராணுவத்திடம் வீழ்ச்சி அடைந்தது.

1999 – பெல்பாஸ்ட் உடன்பாடு: ஐக்கிய இராச்சியம் வட அயர்லாந்தில் அரசியலதிகாரப் பகிர்வுக்கு ஒப்புக் கொண்டது.

2002 – இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் ஒஸ்லோவில் ஆரம்பமாயின.

2006 – பரிதிமாற் கலைஞரின் நூல்கள் தமிழக அரசினால் நாட்டுடமை ஆக்கப்பட்டன.

2006 – பீகார் மாநிலத்தின் பகல்பூரில் பாலம் இடிந்து வீழ்ந்ததில் அதன் வழியாகச் சென்ற கடுகதித் தொடருந்து வண்டி விபத்துக்குள்ளாகியதில் 35 பேர் கொல்லப்பட்டனர்.

2016 – கலிபோர்னியா, ஓக்லாந்தில் களஞ்சியச் சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 36 பேர் உயிரிழந்தனர்.