• Thu. Apr 25th, 2024

வரலாற்றில் இன்று பெப்ரவரி 17

Feb 17, 2022

பெப்ரவரி 17 கிரிகோரியன் ஆண்டின் 48 ஆம் நாளாகும்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 317 (நெட்டாண்டுகளில் 318) நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

364 – உரோமைப் பேரரசர் யோவியன் எட்டு மாத கால ஆட்சியின் பின்னர் அனத்தோலியாவில் மர்மமான முறையில் இறந்தார்.

1600 – மெய்யியலாளர் கியோர்டானோ புரூணோ உரோம் நகரில் சமய மறுப்புக்காக உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார்.

1739 – மராட்டியர் போர்த்துக்கீசரின் பிடியில் இருந்த வாசை நகர் (மகாராட்டிரத்தில்) மீது தாக்குதலை ஆரம்பித்தனர்.

1753 – சுவீடன் யூலியன் நாட்காட்டியில் இருந்து கிரெகொரியின் நாட்காட்டிக்கு மாறியது. பெப்ரவரி 17ம் நாளுக்கு அடுத்த நாள் மார்ச் 1 ஆக மாற்றப்பட்டது.

1788 – லெப்டினண்ட் போல் என்பவன் சிட்னியில் இருந்து நோர்போக் தீவுக்கு கைதிகளைக் குடியேற்றச் சென்ற போது மனிதர்களற்ற லோர்ட் ஹோவ் தீவைக் கண்டுபிடித்தான்.

1838 – தென்னாப்பிரிக்காவில் நத்தாலில் நூற்றுக்கணக்கான இடச்சுக் குடியேறிகளை சூலு இனத்தோர் கொன்றனர்.

1854 – ஐக்கிய இராச்சியம் ஆரஞ்சு விடுதலை இராச்சியத்தை விடுதலை பெற்ற நாடாக அங்கீகரித்தது.

1863 – ஜெனீவாவின் குடிமக்கள் சிலர் இணைந்து காயமடைந்தோர்க்கான பன்னாட்டு நிவாரணக் குழுவை அமைத்தனர். இது பின்னர் பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கம் என அழைக்கப்பட்டது.

1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: எச்.எல். ஹன்லி என்ற நீர்மூழ்கிக் கப்பல் யூஎஸ்எஸ் ஹவுசட்டோனிக் என்ற போர்க்கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது.

1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: தென் கரோலினாவின் கொலம்பியா நகரம் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் படைகள் வெளியேற்றத்தின் போது தீயிடப்பட்டது.

1867 – சூயசுக் கால்வாயூடாக முதலாவது கப்பல் சென்றது.

1871 – பிரான்சிய-புருசியப் போரில் பாரிசு நகரைக் கைப்பற்றிய புருசிய இராணுவம் பாரிசு நகரில் வெற்றி ஊர்வலத்தை நடத்தியது.

1881 – இலங்கையில் இரண்டாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. நாட்டின் மொத்தத் தொகை 2,759,738, வட மாகாணத்தில் 302,500, யாழ்ப்பாணத்தில் 40,057 ஆகக் கணக்கெடுக்கப்பட்டது.

1933 – நியூஸ்வீக் முதலாவது இதழ் வெளிவந்தது.

1936 – சிறுவர்களுக்கான அதிமேதாவி மாயாவி முதற்தடவையாக வரைகதைகளில் தோன்றினார்.

1947 – வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா தனது ஒலிபரப்புச் சேவையை சோவியத் ஒன்றியத்துக்கு ஆரம்பித்தது.

1948 – இலங்கை, காலியில் பட்டாசுத் தொழிற்சாலை ஒன்று வெடித்ததில் 16 பேர் உயிரிழந்தனர், 25 பேர் காயமடைந்தனர்.

1957 – மிசூரியில் வயோதிபர் இல்லம் தீக்கிரையாகியதில் 72 பேர் உயிரிழந்தனர்.

1959 – முதலாவது காலநிலை செய்மதி வான்கார்ட் 2 விண்ணுக்கு ஏவப்பட்டது.

1964 – காபொனில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அந்நாட்டின் அரசுத்தலைவர் லேயொன் உம்பா பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

1965 – அப்பல்லோ 11 மூலம் நிலாவிற்கு மனிதரை அனுப்புவதற்கு முன்னோட்டமாக நிலாவில் தரையிறங்குவதற்கான இடத்தைப் படம் எடுப்பதற்காக ரேஞ்சர் 8 விண்கலம் ஏவப்பட்டது.

1978 – ஐரியக் குடியரசுப் படை போராளிகள் பெல்பாஸ்ட் நகரில் உணவு விடுதி ஒன்றில் எரிகுண்டு ஒன்றை வெடிக்க வைத்ததில் 12 பேர் கொல்லப்பட்டனர்.

1979 – மக்கள் சீனக் குடியரசுக்கும் வியட்நாமுக்கும் இடையில் போர் ஆரம்பமாகியது.

1982 – இலங்கைத் துடுப்பாட்ட அணி தனது முதலாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியை இங்கிலாந்துக்கு எதிராக கொழும்பு ஓவல் அரங்கில் விளையாடியது.

1990 – இலங்கையின் ஊடகவியலாளர், மனித உரிமை செயற்பாட்டாளர் ரிச்சர்ட் டி சொய்சா கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்.

1992 – நகோர்னோ கரபாக் போர்: ஆர்மீனியப் படைகள் கரதாக்லி நகர ஊடுருவலில் 20 இற்கும் அதிகமான அசர்பைசானியரைக் கொன்றனர்.

1995 – பெருவுக்கும், எக்குவதோருக்கும் இடையில் போர் நிறுத்த உடன்பாடு ஐநா முயற்சியால் ஏற்படுத்தப்பட்டது.

1996 – நாசாவின் டிசுக்கவரி திட்டம் ஆரம்பமானது. 433 ஈரோசு சிறுகோளில் தரையிறங்கும் நோக்கோடு நியர் சூமேக்கர் என்ற விண்கலம் ஏவப்பட்டது.

1996 – பிலடெல்பியாவில் நடைபெற்ற சதுரங்க ஆட்டத்தில் காரி காஸ்பரொவ் ஐபிஎம்மின் டீப் புளூ மீத்திறன் கணினியை வென்றார்.

1996 – இந்தோனேசியாவின் பப்புவா மாகாணத்தில் 8.2 அளவு நிலநடுக்கம், மற்றும் ஆழிப்பேரலை இடம்பெற்றதில் 166 பேர் உயிரிழந்தனர். 423 பேர் காயமடைந்தனர்.

2000 – விண்டோஸ் 2000 வெளியிடப்பட்டது.

2006 – பிலிப்பீன்சில் சென் பேர்னார்ட் நகரில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி 1,126 பேர் உயிருடன் புதையுண்டனர்.

2008 – கொசோவோ செர்பியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

2011 – அரேபிய வசந்தம்: முஅம்மர் அல் கதாஃபியின் ஆட்சிக்கு எதிரான லிபிய ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாயின.

2015 – எயிட்டியில் இடம்பெற்ற மார்டி கிரா பவனியில் ஏற்பட்ட நெரிசலில், 18 பேர் உயிரிழந்தனர், 78 பேர் காயமடைந்தனர்.

2016 – துருக்கி, அங்காரா நகரில் இராணுவ வாகனக்கள் வெடித்ததில் 29 பேர் கொல்லப்பட்டனர், 61 பேர் காயமடைந்தனர்.