• Fri. Mar 29th, 2024

வரலாற்றில் இன்று மார்ச் 9

Mar 9, 2022

மார்ச் 9 கிரிகோரியன் ஆண்டின் 68 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 69 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 297 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

கிமு 141 – லியூ சே சீனாவின் ஆன் வம்சப் பேரரசராக முடிசூடினார்.

1009 – லித்துவேனியா பற்றிய முதலாவது வரலாற்றுப் பதிவு குவெட்லின்பர்க் மதப்பள்ளியின் ஆண்டுக்குறிப்பில் இடம்பெற்றுள்ளது.

1226 – சுல்தான் யலால் அத்-தின் சார்சியத் தலைநகர் திபிலீசியைக் கைப்பற்றினார்.

1500 – பெத்ரோ கப்ராலின் கடற்படையினர் லிசுபனில் இருந்து கிழக்கிந்தியத் தீவுகள் நோக்கிப் புறப்பட்டனர். இவர்கள் பின்னர் பிரேசிலைக் கண்டுபிடித்தனர்.

1566 – ஸ்காட்லாந்தின் முதலாம் மேரியின் செயலாளர் டேவிட் ரிசியோ எடின்பரோவின் அரண்மனை ஒன்றில் படுகொலை செய்யப்பட்டார்.

1796 – நெப்போலியன் பொனபார்ட் தனது முதலாவது மனைவி யோசபினைத் திருமணம் புரிந்தார்.

1815 – மின்கலத்தால் இயக்கப்படும் மணிக்கூடு பற்றி முதன்முதலாக ஆங்கிலேயப் பொறியியலாளர் பிரான்சிசு ரொனால்ட்சு எழுதினார்.

1841 – தாம் கொண்டுவரப்பட்ட கப்பலைக் கைப்பற்றி வைத்திருந்த ஆப்பிரிக்கர்கள் சட்ட விரோதமாக அடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்டதாக அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

1842 – கலிபோர்னியா தங்க வேட்டைக்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்நாளில் கலிபோர்னியாவில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.

1847 – மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்: அமெரிக்கப் படைகள் ஜெனரல் வின்ஃபீல்ட் ஸ்கொட் தலைமையில் மெக்சிக்கோவைத் தாக்கின.

1896 – ஆத்வா நகர சமரில் இத்தாலி தோல்வியடைந்ததை அடுத்து, இத்தாலியின் பிரதமர் பிரான்சிசுக்கோ கிருசுப்பி பதவி துறந்தார்.

1916 – மெக்சிக்கோ புரட்சி: ஏறத்தாழ 500 மெக்சிக்கர்கள் எல்லை நகரான நியூ மெக்சிக்கோவின் கொலம்பசு நகரைத் தாக்கினர்.

1923 – விளாதிமிர் லெனினுக்கு மூன்றாம் தடவையாக மாரடைப்பு ஏற்பட்டது.

1942 – இரண்டாம் உலகப் போர்: இடச்சு கிழக்கிந்திய இராணுவம் மேற்கு சாவகத்தில் நிபந்தனை எதுவுமின்றி சப்பானியப் படைகளிடம் சரணடைந்தது.

1944 – இரண்டாம் உலகப் போர்: சப்பானியப் படைகள் அமெரிக்கப் படைகளுக்கு எதிராக ஐந்து-நாள் சமரைத் தொடங்கின.

1944 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் இராணுவ வானூர்திகள் எசுத்தோனியா தலைநகர் தாலினைத் தாக்கின.

1945 – இரண்டாம் உலகப் போர்: இந்தோ சீனாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் சப்பானியப் படையினர் பிரான்சியரை ஆட்சியில் இருந்து அகற்றியது.

1945 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்க பி-29 போர் விமானங்கள் டோக்கியோவில் குண்டுகளை வீசியதில் ஏற்பட்ட தீச்சூறாவளியினால் 100,000 பேர் கொல்லப்பட்டனர்.

1946 – இங்கிலாந்து, போல்ட்டன் நகரில் விளையாட்டரங்கில் இடம்பெற்ற நெரிசலில் 33 பேர் உயிரிழந்தனர்.

1956 – நிக்கித்தா குருசேவின் ஸ்டாலினுக்கு எதிரான கொள்கைக்கு எதிராக ஜோர்ஜியாவில் இடம்பெற்ற மாபெரும் மக்கள் எதிர்ப்புப் போராட்டம் சோவியத் இராணுவத்தினரால் நசுக்கப்பட்டது.

1957 – அலாஸ்காவில் அலூசியன் தீவுகளில் ஏற்பட்ட 8.6 அளவு நிலநடுக்கத்தில் பலத்த சேதமும் ஆழிப் பேரலையும் ஏற்பட்டது.

1959 – பார்பி பொம்மை நியூ யோர்க் நகரில் அமெரிக்க அனைத்துலக விளையாட்டுப் பொருட்கள் கண்காட்சியில் முதன் முதலாகக் காட்சிக்கு வைக்கப்பட்டது.

1960 – பெல்டிங் இபார்ட் இசுக்ரிப்னர் என்பவர் தான் கண்டுபிடித்த இடைக்கடத்தி ஒன்றை நோயாளி ஒருவருக்குப் பொருத்தினார். இவ்விடைக்கடத்தி அந்நோயாளி முறையாக இரத்தத்தூய்மிப்புப் பெற அனுமதிக்கிறது.

1961 – சோவியத்தின் ஸ்புட்னிக் 9 விண்கலம் இவான் இவானொவிச் என்ற மனிதப் போலியை வெற்றிகரமாக விண்வெளிக்குக் கொண்டு சென்றது. இதன் மூலம் சோவியத் ஒன்றியம் மனித விண்வெளிப்பறப்புக்கு தயாரென அறிவித்தது.

1967 – அமெரிக்காவின் இரு விமானங்கள் ஒகையோ மாநிலத்தில் வானில் மோதிக் கொண்டதில் 26 பேர் உயிரிழந்தனர்.

1976 – இத்தாலியின் டிறெண்டோ என்ற இடத்தில் ஆகாயத்தில் நகர்ந்து கொண்டிருந்த கம்பிவட ஊர்தி கீழே விழுந்ததில் 15 சிறுவர்கள் உட்பட 42 பேர் உயிரிழந்தனர்.

1977 – இசுலாமியத் தீவிரவாதிகள் வாசிங்டன், டி. சி.யில் மூன்று கட்டிடங்களை 39-மணிநேரம் கைப்பற்றி வைத்திருந்ததில் 2 பேர் கொல்லப்பட்டு, 149 பேர் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்.

1986 – சலேஞ்சர் விண்ணோடத்தின் அழிந்த சிதைவுகளை ஐக்கிய அமெரிக்காவின் ஆழ்கடலோடிகள் கண்டுபிடித்தனர். இறந்த ஏழு விண்வெளி வீரர்களினதும் உடல்கள் உள்ளே இருந்தன.

1997 – சீனா, மங்கோலியா, கிழக்கு சைபீரிய வானியலாளர்கள் பகல் நேரத்தில் ஏல்-பாப் வால்வெள்ளியைக் கண்ணுற்றனர்.

2006 – சனியின் துணைக்கோளான என்செலாடசில் திரவ நிலையில் நீர் கண்டுபிடிக்கப்பட்டது.

2011 – டிஸ்கவரி விண்ணோடம் தனது 39-வதும், கடைசியுமான பயணத்தை முடித்து பூமி திரும்பியது.

2012 – காசாக்கரையில் இருந்து 130 ஏவுகணைகள் இசுரேல் நோக்கி ஏவப்பட்டன.