• Sat. Jul 27th, 2024

வரலாற்றில் இன்று நவம்பர் 20

Nov 20, 2021

நவம்பர் 20 கிரிகோரியன் ஆண்டின் 324 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 325 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 41 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

284 – டயோக்கிளேசியன் உரோமைப் பேரரசராக முடி சூடினார்.

1194 – புனித உரோமைப் பேரரசர் ஆறாம் என்றி பலெர்மோவைக் கைப்பற்றினார்.

1658 – இலங்கையில் போர்த்துக்கீசர் மீதான வெற்றியைக் குறிக்க இந்நாள் இடச்சு ஆட்சியாளர்களினால் நன்றி தெரிவிப்பு நாளாக அறிவிக்கப்பட்டது.

1776 – அமெரிக்கப் புரட்சிப் போர்: அமெரிக்க விடுதலைப் படை நியூ செர்சியில் இருந்து பின்வாங்க ஆரம்பித்தது.

1789 – நியூ செர்சி உரிமைகளின் சட்டத்தை ஏற்றுக் கொண்ட முதலாவது அமெரிக்க மாநிலமானது.

1820 – தென் அமெரிக்காவில் 80-தொன் எடையுள்ள எண்ணெய்த் திமிங்கிலம் ஒன்று எசெக்சு என்ற திமிங்கில வேட்டைக் கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது.

1910 – பிரான்சிஸ்கோ மடேரோ மெக்சிகோ அரசுத்தலைவர் போர்பீரியோ டயஸ் என்பவரைப் பதவியில் இருந்து அகற்றிவிட்டதாகவும் தன்னை அரசுத்தலைவராகவும் அறிவித்தார். மெக்சிக்கோ புரட்சி ஆரம்பமாயிற்று.

1923 – செருமனியின் நாணயம் பேப்பியர்மார்க் ரெண்டென்மார்க் ஆக மாற்றப்பட்டது. (1 ரெண்டென்மார்க் = 1 திரில்லியன் பேப்பியர்மார்க்)

1936 – எசுப்பானிய அரசியல்வாதி ஒசே அந்தோனியோ பிறிமோ டெ ரிவேரா கொல்லப்பட்டார்.

1940 – இரண்டாம் உலகப் போர்: அங்கேரி அச்சு நாடுகள் அமைப்பில் இணைந்தது.

1943 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படையினர் கில்பர்ட் தீவுகளில் தரவா நகரில் தரையிறங்கியதில், அங்கிருந்த சப்பானியப் படைகளினால் பெரும் தாக்குதலுக்குள்ளானர்கள்.

1945 – நியூரம்பெர்க் தீர்ப்பாயம்: 24 நாட்சி போர்க் குற்றவாளிகளுக்கு எதிரான வழக்கு நியூரம்பெர்க்கில் ஆரம்பமானது.

1947 – இளவரசி எலிசபெத் – இளவரசர் பிலிப்பு திருமணம் இலண்டனில் இடம்பெற்றது.

1959 – குழந்தைகள் உரிமை சாசனம் ஐக்கிய நாடுகள் அவையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

1962 – சோவியத் ஒன்றியம் தனது ஏவுகணைகளை கியூபாவில் இருந்து அகற்றுவதாக வாக்குறுதி அளித்ததை அடுத்து, அமெரிக்கத் தலைவர் ஜான் எஃப். கென்னடி கரிபியன் நாட்டுக்கெதிராக கொண்டுவந்த பொருளாதாரத் தடைகளை திரும்பப் பெற்றுக் கொண்டது. கியூபா ஏவுகணை நெருக்கடி முடிவுக்கு வந்தது.

1968 – மேற்கு வர்ஜீனியாவில் நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 78 தொழிலாளர்கள் இறந்தனர்.

1969 – வியட்நாம் போர்: வியட்நாமில் இடம்பெற்ற மை லாய் படுகொலைகள் தொடர்பான ஆவணப் படங்களை பிளெயின் டீலர் என்ற பத்திரிகை வெளியிட்டது.

1969 – அமெரிக்கப் பழங்குடி செயற்பாட்டாளர்கள் அல்காட்ராசு தீவை ஆக்கிரமித்தனர். இத்தீவைப் பின்னர் அமெரிக்க அரசு 1971 சூன் 11 இல் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

1977 – எகிப்திய அரசுத்தலைவர் அன்வர் சாதாத் இசுரேலியப் பிரதமர் மெனசெம் பெகின் உடன் அமைதிப் பேச்சுக்களுக்காக இசுரேல் சென்றடைந்தார். இசுரேல் சென்ற முதல் அரபுத் தலைவர் இவரே.

1977 – ஆறு ஆண்டுகள் சிறைக்குப் பின் இலங்கையின் ஜனதா விமுக்தி பெரமுன தலைவர் றோகண விஜேவீர விடுதலை செய்யப்பட்டார்.

1979 – பெரிய பள்ளிவாசல் கைப்பற்றல்: சவூதி அரேபியா, மெக்காவில் கஃபா மசூதியைத் தாக்கிய இசுலாமியத் தீவிரவாதிகள் 6,000 பேரைப் பணயக் கைதிகளாக்கினர். பிரான்சியப் படைகளின் உதவியுடன் இத்தாக்குதல் முறியடிக்கப்பட்டது.

1985 – மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் 1.0 வெளியிடப்பட்டது.

1988 – ராஜிவ் காந்திக்கும் மிக்கைல் கோர்பசேவுக்கும் இடையே இரு அணு உலைகளைக் கூடங்குளத்தில் அமைப்பது என்ற ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. எனினும் சோவியத் கலைப்பை அடுத்து இத்திட்டம் பின்னர் கைவிடப்பட்டது.

1991 – 19 பேரடங்கிய அமைதிப் பணிக் குழுவுடன் சென்ற அசர்பைஜான் எம்ஐ-8 உலங்குவானூர்தி ஒன்று ஆர்மீனிய இராணுவத்தினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது.

1992 – இங்கிலாந்து வின்சர் அரண்மனையில் தீ பரவியதில் பெரும்சேதம் ஏற்பட்டது.

1993 – மகெடோனியாவில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 116 பயணிகளில் 115 பேரும் 8 பணியாளர்களும் உயிரிழந்தனர்.

1994 – அங்கோலா அரசுக்கும் யுனிட்டா தீவிரவாதிகளுக்கும் இடையே சாம்பியாவில் போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டதில் 19 ஆண்டு கால உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. எனினும் அடுத்த ஆண்டு போர் மீண்டும் ஆரம்பமாயிற்று.

1996 – ஆங்காங்கில் அலுவலகக் கட்டடம் ஒன்றில் தீப்பற்றியதில் 41 பேர் உயிரிழந்தனர், 81 பேர் காயமடைந்தனர்.

1998 – பன்னாட்டு விண்வெளி நிலையத்தின் முதலாவது பகுதி சர்யா விண்ணுக்கு அனுப்பப்பட்டது.

1999 – இலங்கையில் மன்னார், மடுத் தேவாலயம் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 31 தமிழ்ப் பொது மக்கள் கொல்லப்பட்டனர், 64 பேர் காயமடைந்தனர்.

2015 – மாலியில் தங்குவிடுதி ஒன்றில் இடம்பெற்ற தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டனர்.