• Sat. Jul 27th, 2024

வரலாற்றில் இன்று அக்டோபர் 5

Oct 5, 2021

அக்டோபர் 5 கிரிகோரியன் ஆண்டின் 278 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 279 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 87 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

610 – எராகிளியசு ஆப்பிரிக்காவில் இருந்து கான்ஸ்டண்டினோபோலை கப்பல் மூலம் அடைந்து பைசாந்தியப் பேரரசன் போக்காசை ஆட்சியில் இருந்து கவிழ்த்து பேரரசனானான்.

816 – புனித உரோமைப் பேரரசராக லூயி பயசு முடிசூடினார்.

1143 – லெயோன், காசுட்டில் மன்னர் ஏழாம் அல்பொன்சோ போர்த்துகலை ஒரு இராச்சியமாக அங்கீகரித்தார்.

1450 – பவேரியாவில் இருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டனர்.

1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை.

1780 – வேலு நாச்சியார் தலைமையில் திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் படையெடுப்பு இடம்பெற்றது.

1789 – பிரெஞ்சுப் புரட்சி: பாரிஸ் பெண்கள் பதினாறாம் லூயி மன்னனுக்கு எதிராக வெர்சாய் அரண்மனை நோக்கி அணிதிரண்டு சென்றனர்.

1795 – இலங்கையின் மன்னார்ப் பகுதியை ஆங்கிலேயர் கைப்பற்றினர்.

1799 – ஆங்கிலேயரினால் பிடிக்கப்பட்ட கட்டபொம்மன் கயத்தாறு கொண்டுவரப்பட்டு சிறையிலடைக்கப்பட்டான்.

1838 – கிழக்கு டெக்சாசில் 18 குடியேறிகள் படுகொலை செய்யப்பட்டனர்.

1864 – இந்தியாவின் கல்கத்தா நகரத்தில் இடம்பெற்ற சூறாவளி நகரை முற்றாக சேதப்படுத்தியது. ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

1905 – ரைட் சகோதரர்கள் 24 மைல்களை 39 நிமிடங்களில் விமானத்தில் பறந்து சாதனை படைத்தனர்.

1910 – போர்த்துக்கலில் இடம்பெற்ற புரட்சியை அடுத்து அங்கு மன்னராட்சி முடிவுக்கு வந்து குடியரசாகியது.

1911 – கவுலூன்-குவாங்சோவ் தொடருந்துச் சேவை ஆரம்பமானது.

1915 – முதலாம் உலகப் போர்: பல்கேரியா போரில் இறங்கியது.

1930 – பிரித்தானிய வான்கப்பல் ஆர்101 தனது முதலாவது பயணத்தில் இந்தியா செல்லும் வழியில் பிரான்சில் விபத்துக்குள்ளானதில் 48 பேர் உயிரிழந்தனர்.

1938 – நாட்சி செருமனியில் யூதர்களின் கடவுச்சீட்டுகள் செல்லுபடியற்றதாக்கப்பட்டன.

1943 – இரண்டாம் உலகப் போர்: வேக் தீவில் 98 அமெரிக்கப் போர்க் கைதிகள் சப்பானியப் படைகளால் கொல்லப்பட்டனர்.

1947 – பஞ்சத்தில் வாடும் ஐரோப்பியருக்காக தானியங்கள் உட்கொள்ளுதலைக் குறைக்குமாறு தொலைக்காட்சி உரையில் அரசுத்தலைவர் ட்ரூமன் அமெரிக்க மக்களைக் கேட்டுக் கொண்டார்.

1948 – துருக்மெனிஸ்தான் தலைநகர் அசுகாபாத் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

1974 – இங்கிலாந்தில் ஐரியக் குடியரசு இராணுவத்தினர் மதுபான சாலை ஒன்றில் குண்டு ஒன்றை வெடிக்க வைத்ததில் 5 பேர் கொல்லப்பட்டனர். 65 பேர் காயமடைந்தனர்.

1970 – அமெரிக்காவில் பொது ஒளிபரப்புச் சேவை ஆரம்பிக்கப்பட்டது.

1978 – ஈழத்தமிழர்களின் பிரச்சனையை ஐக்கிய நாடுகள் அவையின் கவனத்தில் கொண்டு வந்து தமிழீழ தேசத்தினைத் தனிநாடாக அங்கீகரிக்குமாறு கிருஷ்ணா வைகுந்தவாசன் ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றினார்.

1987 – விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் குமரப்பா, புலேந்திரன் உட்பட 12 பேர் இந்தியப் படையின் காவலில் இருக்கும்போது நஞ்சருந்தி மரணமானார்கள்.

1988 – சிலியின் எதிர்க்கட்சிக் கூட்டணி அகஸ்தோ பினோசெட்டை அரசுத்தலைவர் தேர்தலில் தோற்கடித்தனர்.

1991 – இந்தோனேசியாவின் இராணுவ விமானம் ஒன்று ஜகார்த்தாவில் விபத்துக்குள்ளாகியதில் 137 பேர் இறந்தனர்.

1999 – மேற்கு லண்டனில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 31 பேர் கொல்லப்பட்டனர்.

2000 – செர்பியாவில் சிலோபதான் மிலோசேவிச்சுக்கு எதிரான மிகப் பெரும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

2008 – கிர்கிஸ்தானில் சீன எல்லை மலைப்பகுதியில் 6.6 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் குறைந்தது 65 பேர் உயிரிழந்தனர்.

2011 – மேக்கொங் ஆற்றில் இரண்டு சீன சரக்குப் படகுகள் கடத்தப்பட்டதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.