• Fri. Apr 19th, 2024

குழந்தைகளுக்கு வழங்கிய முட்டைகளில் குஞ்சு

Jul 7, 2021

தமிழகத்தில் ராமநாதபுரம் அருகே அங்கன்வாடி குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட முட்டைகள் அழுகிய நிலையிலும், பல முட்டைகளில் குஞ்சுகளும் இருந்ததால் பெற்றோர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

கடலாடி அருகே ஆய்க்குடி அங்கன்வாடி மையத்தில் 20 குழந்தைகள் பயின்று வருகின்றனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக மாணவர்களுக்கு வழங்கப்படும், அரிசி, பருப்பு மற்றும் முட்டைகள் ஆகியவற்றை வீடுகளுக்கு சென்று வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, அங்கன்வாடி ஊழியர்களால் ஆய்க்குடி அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட முட்டைகள் தரமற்ற நிலையில் இருப்பதை கண்டு பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அதோடு பல முட்டைகள் அழுகியும், குஞ்சுகள் உருவான நிலையில் இருந்ததால், அங்கன்வாடி பொறுப்பாளரிடம், பெற்றோர்கள் புகார் அளித்தனர்.

கொரோனா தொற்று போன்ற நோய்களின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களை தரமானதாக வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.