• Sun. Jul 21st, 2024

உக்ரைனில் உணவுக்காக வரிசையில் நின்றபோது கொல்லப்பட்ட இந்திய மாணவர்

Mar 1, 2022

ரஷியா இன்று 6-வது நாளாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது.

நள்ளிரவு முதல் ரஷியாவின் தாக்குதல் மீண்டும் தீவிரம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று பல இடங்களில் ஏவுகணைகள் வீசப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் இன்று காலை கார்கிவ் நகரில் ரஷிய ஷெல் தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்ததாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

“இன்று காலை கார்கிவ் நகரில் இந்திய மாணவர் ஒருவர் ஷெல் தாக்குதலில் உயிரிழந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் உறுதிப்படுத்துகிறோம். அவரது குடும்பத்தினருடன் அமைச்சகம் தொடர்பில் உள்ளது. குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என கூறி உள்ளது.

தற்போது மாணவர் உயிரிழந்தது எப்படி என்பது குறித்த உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளது.

நவீன் சேகரப்பா கர்நாடக மாநிலம் ஹாவேரி பகுதியைச் சேர்ந்தவர். இவர் கார்கீவ் தேசிய மெடிக்கல் யுனிவர்சிட்டியில் இறுதி ஆண்டு மருத்துவ படிப்பு படித்து வந்தார்.

ரஷிய படைகள் உக்கிரமாக தாக்குதல் நடத்தி வருவதால் இந்திய மாணவர்கள் அண்டை மாநில எல்லைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் அவர்கள் தங்கியிருக்கும் இடத்திலேயே பதுங்கு குழியில் தங்களது உயிரை பிடித்துக் கொண்டு பயத்துடன் நடுங்கி இருக்கிறார்கள்.

கார்கீவ் நகரில் உள்ள கவர்னர் மாளிக்கைகு அருகில் உள்ள கட்டிடத்திற்கு அடியில் இந்திய மாணவர் நவீன் உள்பட சிலர் பதுங்கியிருந்துள்ளனர்.

உணவு மற்றும் கைச்செலவுக்கு பணம் எடுக்க வெளியில் சென்றுள்ளார். மளிகை கடையில் பொருட்கள் வாங்க செல்வதாக அவனது அப்பாவிடம் நவீன் செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

தந்தையிடம் போன் பேசிய இரண்டு மணி நேரத்திற்குள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

கடையில் பொருட்கள் வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்கும்போது, ரஷிய வீரர்கள் ஏவிய ராக்கெட் குண்டு அந்த பகுதியில் விழுந்து வெடிக்க நவீன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கார்கீவ் நகரில் உள்ள மாணவர்களின் ஒருங்கிணைப்பாளர் பூஜா பிரஹாராஜ் கூறுகையில்,

‘‘நவீன் உணவு வாங்குவதற்கு வெளியில் சென்றார். மற்றவர்கள் ஓட்டலில் உள்ளனர். அவர்களுக்கு நாங்கள் உணவு வழங்கினோம். நவீன் பிளாட்டில் இருந்தார்.

அவர் இருந்த பிளாட், கவர்னர் மாளிகைக்கு பின்னால் உள்ளது. சுமார் இரண்டு மணி நேரம் வரிசையில் நின்றிருந்தார். திடீரென கவர்னர் மாளிகையில் ராக்கெட் வெடிகுண்டு விழுந்தது. இதில் நவீன் பரிதாபமாக உயிரிழந்தார்’’ என்றார்.

அவரது செல்போனில் இருந்து அழைப்பு வந்தது. அப்போது, இந்த செல்போன் உரிமையாளர் பிணவறைக்கு எடுத்துச் செல்லப்படுகிறார் என தகவல் பெறப்பட்டதாக பூஜா பிரஹாராஜ் தெரிவித்தார்.

ஆனால், நவீன் நண்பர் ஸ்ரீதரன் கோபாலகிருஷ்ணன் கூறுகையில் ‘‘உக்ரைன் நேரத்திற்கு காலை 10.30 மணிக்கு நவீன் கொல்லப்பட்டார். மளிகை கடையில் நீண்ட வரிசையில் நின்றிருந்தார்.

ரஷிய வீரர்கள் அப்போது பொதுமக்கள் நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். அவரது உடல் குறித்து எங்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை’’ என்றார்.