• Wed. Jul 24th, 2024

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா? நாளை முடிவு!

Jul 29, 2021

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே இந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று, கடந்த மே மாதம் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பதவியேற்ற சமயத்தில், தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தையும் தாண்டி பதிவாகி வந்தது.

அதன் பின்னர் தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்ட தீவிர கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மூலம் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

இதன் காரணமாக ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் தற்போது அமலில் இருக்கும் தளர்த்தப்பட்ட ஊரடங்கு வரும் 31 ஆம் தேதியோடு முடிவடைகிறது.

தற்போது வரை பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள் உள்ளிட்ட இடங்களை திறப்பதற்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாகவும் சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை காலை முதல்-அமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை செயலாளர், தலைமைச் செயலாளர் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

மேலும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிகளின் அடிப்படையில் ஊரடங்கு தொடர்பான அறிவிப்பை முதல்-அமைச்சர் ஸ்டாலின் வெளியிடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.