• Sat. Jul 27th, 2024

ஊழியரின் முகத்தில் சுடு தண்ணீரை ஊற்றிய இராணுவ வீரர்

Sep 16, 2021

கராப்பிடிய வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சாலையில் வைத்து இராணுவ வீரர் ஒருவருக்கும், வைத்தியசாலையின் ஊழியர் ஒருவருக்கும் ஏற்பட்ட பிரச்சினையில், ஊழியரின் முகத்தில் இராணுவ வீரர் ஒருவர் கொதிக்கும் சுடு நீரை ஊற்றிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

இதேவேளை தீக்காயங்களுக்கு உள்ளான வைத்தியசாலையின் ஊழியர் கராப்பிடிய வைத்தியசாலையின் 58ஆவது இலக்க வார்ட்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றார் என வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.

பத்தேகம அம்பெகம பிரதேசத்தைச் சேர்ந்த தற்போது அநுராதபுரம் சாலியவெவ முகாமில் பணியாற்றி வரும் இராணுவ வீரர் தனது 8 வயது மகனுக்கு சுகயீனம் காரணமாக கராப்பிடிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

வைத்தியசாலையில் தங்கி சிகிச்சைப் பெற்றுவரும் தனது மகன் சுடு தண்ணீர் கேட்டதால், அதனை பெற்றுக்கொள்ள வைத்தியசாலையின் சிற்றுண்டிச் சாலைக்கு சென்றுள்ளார்.

இதேவேளை வைத்தியசாலையின் ஊழியரும் சிற்றுண்டிச் சாலைக்கு வந்து தேனீரை கோரியுள்ளார். தேனீரும், சுடு தண்ணீரும் ஒரே கவுண்டரில் வழங்கப்படுவதால் ஏற்பட்ட தாமதம் காரணமாக இராணுவ வீரருக்கும், ஊழியருக்கும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

வாய்த்தர்க்கம் உச்சக்கட்டத்தை அடைந்ததால் ஆத்திரமடைந்த இராணுவ வீரர் ஊழியரின் முகத்தில் சுடு தண்ணீரை ஊற்றியுள்ளார்.