• Sat. Sep 7th, 2024

இன்று முதல் கூடும் இலங்கைப் பாராளுமன்றம்

Feb 8, 2022

ஐம்பதிற்கும் அதிகமான பாராளுமன்ற ஊழியர்கள் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன், 14 பாராளுமன்ற உறுப்பினர்கள் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு சுய தனிமைப்படுத்தலில் உள்ள நிலையில் இன்று தொடக்கம் அடுத்த நான்கு நாட்களுக்கான பாராளுமன்ற அமர்வுகள் இன்று காலை கூடுகின்றது.

நாட்டில் வேகமாக பரவிவரும் கொவிட் -19 வைரஸ் பரவலை அடுத்து 50ற்கும் அதிகமான பாராளுமன்ற ஊழியர்கள் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன், 14 பாராளுமன்ற உறுப்பினர்களும் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு சுய தனிமைப்படுத்தலில் உள்ளனர்.

இந்நிலையில் இந்த வாரத்திற்கான பாராளுமன்ற அமர்வுகளை கூட்டுவதற்கான தீர்மானம் எடுக்கும் கட்சி தலைவர்கள் கூட்டம் திங்கட்கிழமை பிற்பகல் பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தலைமையில் கூடியது.

எனினும் கொவிட் சவால்களுக்கு மத்தியிலும் பாராளுமன்றத்தை இன்று தொடக்கம் 11 ஆம் திகதி வரை கூட்டுவதற்கு பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணிவரை 2015ஆம் ஆண்டு 05ஆம் இலக்க தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டத்தின் கீழான இரண்டு ஒழுங்குவிதிகளும், மஹாபொல உயர் கல்விப் புலமைப்பரிசில் நம்பிக்கைப்பொறுப்பு நிதியம் (திருத்தச்) சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

அன்றையதினம் அரசாங்கத்தின் தினப்பணிகளின் பின்னர் ஸ்ரீ சாக்கியசிங்காராம விகாரஸ்த கார்யசாதக சங்விதான (கூட்டிணைத்தல்) சட்டமூலம் இரண்டாவது வாசிப்பைத் தொடர்ந்து சட்டவாக்க நிலையியற் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படவிருப்பதாகவும் செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.

பெப்ரவரி 09 மற்றும் 10 ஆம் திகதிகளில் குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம், ஆளணியினருக்கெதிரான கண்ணிவெடிகளைத் தடைசெய்தல் சட்டமூலம், குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம், மாகாணசபைகள் (முத்திரைத் தீர்வையைக் கைமாற்றுதல்) திருத்தச் சட்டமூலம், 1969ஆம் ஆண்டு 01 ஆம் இலக்க ஏற்றுமதி மற்றும் இறக்குமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் என்பன விவாதிக்கப்பட்டு 10ஆம் திகதி நிறைவேற்றப்படவுள்ளன.

இன்று தொடக்கம் 10ஆம் திகதி வரை தினமும் முற்பகல் 10.00 மணி முதல் முற்பகல் 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பெப்ரவரி 08 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை தினமும் பிற்பகல் 4.30 மணி முதல் 4.50 மணிவரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதுடன், பி.ப 4.50 மணி முதல் பி.ப 5.30 மணிவரையான காலப் பகுதியில் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை மீதான விவாதமும் இடம்பெறும்.

அதேநேரம், பெப்ரவரி 11 ஆம் திகதி முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தொடர்பான அனுதாபப் பிரரேரணை மீதான விவாதத்தை நடத்துவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டதாக செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.

இதற்கமைய அன்றையதினம் வாய்மூல விடைக்கான கேள்வி, ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்வி, சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை என்பவற்றுக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை

அத்துடன் பாராளுமன்ற சார சங்ஹிதா’ புலமை இலக்கிய நூலின் இரண்டாவது தொகுதி வெளியீட்டு விழா 2022 இன்று முற்பகல் 11.00 மணிக்கு பாராளுமன்ற குழு அறை இலக்கம் 01 ல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஆகியோர் தலைமையில் இடம்பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.