• Tue. Mar 26th, 2024

ஒமைக்ரானோடு நின்று விடாது! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

Jan 24, 2022

உலக அளவில் ஒமைக்ரானின் அதிக பரவலானது புதிய உருமாறிய வகை உருவாக வழிவகுக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்து உள்ளது.

உலக நாடுகளில் கொரோனா பாதிப்புகள் பெரும் அச்சுறுத்தலாக நீடித்து வருகின்றன. அவற்றில் கடந்த 2021ம் ஆண்டு வந்த டெல்டா வகையால் இந்தியாவில் 2வது அலை உருவாகி பலத்த பாதிப்புகளை ஏற்படுத்தி சென்றது.

இதன்பின்னர் டெல்டா பிளஸ் வகை வந்தபோதிலும், பெருமளவில் பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை. நடப்பு ஆண்டிலும் கொரோனாவின் டெல்டா வகையே அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த சூழலில், ஒமைக்ரான் என்ற புதிய உருமாறிய வகையானது, தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு பின்பு உலக நாடுகளில் பரவ தொடங்கியது.

முழு அளவில் தடுப்பூசி செலுத்தியவர்களையும் இந்த ஒமைக்ரான் விட்டு வைக்கவில்லை.

எனினும், இதனால் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், பெருந்தொற்று இத்துடன் முடிந்து விடாது. உலக அளவில் ஒமைக்ரானின் அதிக பரவலானது புதிய உருமாறிய வகை உருவாக வழிவகுக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்து உள்ளது.

கொரோனாவின் கடைசி வகையாக ஒமைக்ரான் இருக்கும். அத்துடன் கொரோனா முடிவுக்கு வந்து விடும் என மக்கள் பலர் கூறி கொள்வது எங்களுக்கு தெரிய வந்துள்ளது.

ஆனால், அப்படியல்ல. இந்த ஒமைக்ரானது உலகம் முழுவதும் மிக தீவிரமுடன் பரவிவருகிறது என அந்த அமைப்பின் கொரோனா தொழில்நுட்ப குழு தலைவரான மரியா வான் கெர்கோவ் ஜெனீவா நகரில் பேசும்போது கூறியுள்ளார்.

சர்வதேச அளவில் கடந்த வாரத்தில் 20% அளவுக்கு புதிய பாதிப்புகள் அதிகரித்து உள்ளன. மொத்தம் 1.9 கோடி பேருக்கு பாதிப்புகள் பதிவாகி உள்ளன. எனினும், கணக்கில் வராத புதிய பாதிப்புகளால் உண்மையான எண்ணிக்கை மிக அதிகம் இருக்க கூடும் என்று கெர்கோவ் குறிப்பிட்டு உள்ளார்.