• Fri. Jul 26th, 2024

மூன்றாம் உலகப் போரை உருவாக்குகிறார் ஜோ பைடன்

Jan 31, 2022

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் கன்ரோ நகரில் குடியரசு கட்சியின் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் கலந்து கொண்டு தனது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றினார்.

அப்போது அவர் ரஷியா-உக்ரைன் விவகாரத்தில் ஜனாதிபதி ஜோ பைடனின் தலையீடு குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார். இது குறித்து அவர் பேசியதாவது:-

”வாஷிங்டனில் உள்ள அனைவரும் உக்ரைனின் எல்லையை எவ்வாறு பாதுகாப்பது என்பதில் ஆர்வமாக உள்ளனர், ஆனால் இப்போது உலகின் மிக முக்கியமான எல்லை உக்ரைனின் எல்லை அல்ல, அது அமெரிக்காவின் எல்லை. அதை பாதுகாக்க நீங்கள் எதுவும் செய்யவில்லை.

அமெரிக்க ஜனாதிபதியின் முதல் கடமை அமெரிக்க எல்லைகளை பாதுகாப்பதே. ஆனால் தற்போதைய அமெரிக்க நிர்வாகம் அதற்கு பதிலாக மற்ற நாடுகளின் ‘‘படையெடுப்பு’’ பற்றிய பேச்சுகளில் ஈடுபட்டுள்ளது.

கிழக்கு ஐரோப்பாவின் எல்லையைப் பாதுகாக்க ஜோ பைடன் எந்தப் படைகளையும் அனுப்புவதற்கு முன்பு, டெக்சாசில் உள்ள நமது எல்லையைப் பாதுகாக்க அவர் படைகளை அனுப்ப வேண்டும். ரஷியா-உக்ரைன் விவகாரத்தில் பதற்றத்தை அதிகரிப்பதன் மூலம் ஜோ பைடன் 3-ம் உலகப்போரின் அபாயத்தை உருவாக்குகிறார்” இவ்வாறு டிரம்ப் பேசினார்.